அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு நேரடியாக அனுப்பிய கடிதத்தை அதிமுக அலுவலகத்தினர் திருப்பி அனுப்பிய நிலையில், அதே கடிதத்தை தேர்தல் ஆணையம் மீண்டும் தபாலில் அனுப்பியுள்ளது.
இந்தியாவில் மாநிலம் விட்டு மாநிலம் புலம்பெயா்ந்து வாழ்வோா் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தபடியே தோ்தலில் வாக்களிக்கும் விதமாக ‘ரிமோட் எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்’ அறிமுகம் செய்யப்படும் எனத் தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த ரிமோட் வாக்குப்பதிவு குறித்து ஆலோசிப்பதற்காக அனைத்து மாநிலங்களில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன்படி தமிழ்நாட்டில் அதிமுக, திமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் சார்பாக நேரடியாக அனுப்பப்பட்ட அழைப்பிதழ் கடிதத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டிருந்ததால், அந்த பொறுப்பில் யாரும் இல்லை எனக்கூறி அதனை வாங்க மறுத்து அதிமுக அலுவலக நிர்வாகிகள் அந்த அழைப்பிதழ் கட்டிதத்தை திருப்பி அனுப்பினர்.
நேரடியாக அனுப்பிய கடிதத்தை அதிமுக திருப்பி அனுப்பிய நிலையில், அதே கடிதத்தை தேர்தல் ஆணையம் தபால் மூலமாக அதிமுக அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. அதிமுக அலுவலகத்திற்கு இந்த கடிதம் செல்லும் பட்சத்தில், அதனை திருப்பி அனுப்ப அதிமுக அலுவலக ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.