உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தக் கோரி பார் கவுன்சில் ஆஃப் இந்தியா தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
பார் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் கடந்த வாரம் நடைபெற்ற நிலையில் அதில் பல்வேறு மாநில பார் கவுன்சில்கள் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டிருந்தனர். பல முக்கியமான முடிவுகள் அதில் எடுக்கப்பட்டிருந்தது.
அதில் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை 62 இல் இருந்து 65 ஆக உயர்த்த வேண்டும் என்றும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் வயதை 65இல் இருந்து 67 ஆக உயர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது. இதற்காக அரசியல் சாசனத்தில் சட்ட திருத்தம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இது தற்பொழுது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு அந்த தீர்மானங்கள் பிரதமர் அலுவலகம் மற்றும் மத்திய சட்டத் துறை அமைச்சக அலுவலகம் ஆகியவற்றிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் அடிப்படையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் வரும் நவம்பர் 8ம் தேதியுடன் ஓய்வு பெறும் தற்போதைய தலைமை நீதிபதியான யு.யு.லலித் அடுத்த இரண்டு ஆண்டிற்கு பதவி நீட்டிப்பு பெறுவார்.
-ம.பவித்ரா








