அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை திடீர் சோதனை நடத்தி வரும் நிலையில், சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மின்சாரம் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகள் உட்பட 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில் சில இடங்களில் ஒரு வாரத்திற்கும் மேலாக சோதனைகள் நீடித்த நிலையில், தற்போது சென்னையில் பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லம், கரூரில் உள்ள இல்லத்திலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறுகையில், சோதனை நடப்பது குறித்து முதலில் தகவல் இல்லை. சோதனை குறித்த தகவல் கிடைத்த பின்னர் நடைப்பயிற்சியை பாதியில் நிறுத்தி விட்டு வாகனம் மூலம் வீட்டிற்கு வந்ததாகவும் தெரிவித்தார். அமலாக்கத்துறை சோதனை குறித்து சட்டப்படி எனக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்பது இல்லை.
அதிகாரிகளின் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன். ஆவணங்கள் குறித்து விளக்கம் கேட்டால் விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறேன். சோதனை முடிந்த பிறகு முழு விவரம் தெரியவரும். அமலாக்கத்துறையோ, வருமான வரித்துறையோ யாராக இருந்தாலும் முழு ஒத்துழைப்பு அளிப்பேன். என்ன நடக்கிறது என்று பொறுத்து இருந்து பார்ப்போம். சோதனை முடிவில் தான் என்ன நோக்கத்துடன் வந்துள்ளார்கள் என்று தெரியும்” என அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.