ஒன் மேன் ஆர்மியாக கடைசிவரை நின்று ஆடி பெங்களூர் அணியை எலிமினேட்டரில் இருந்து குவாலிஃபயர் 2 போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார் ரஜத் படிதர்.
கொல்கத்தா, ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணியும் மோதின. மோசமான வானிலை காரணமாக இந்த ஆட்டம் 15 நிமிடங்கள் தாமதமாகத் தொடங்கியது. டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெளலிங்கை தேர்வு செய்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பெங்களூர் அணியின் ஓப்பனர்களாக வழக்கம்போல விராட்கோலி, கேப்டன் டூப்ளெசிஸ் களமிறங்கினர். மோசின் கான் வீசிய முதல் ஓவரிலேயே டூப்ளெசிஸ் டக் அவுட்டாகினார். விராட் கோலி பெரிய இன்னிங்ஸை ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 25 ரன்களுக்கு ஆவேஷ் கான் பந்தில் அவுட்டாகினார்.
இதேபோல, 2020, 2021 ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணி பிளே ஆஃப் சுற்றுக்குச் சென்று எலிமினேட்டரில் தோல்வி அடைந்தது கண் முன்பு வந்துபோக ஆர்சிபி அணியின் ரசிகர்களை உச்சுக்கொட்ட வைத்தது. ஈ சாலா கப் இந்த ஆண்டும் நம்தில்லையா என சோகத்தில் ஆழ்ந்தனர் ரசிகர்கள்.
ஆர்சிபி அணியைப் பொறுத்தவரை கோலி, ஃபாப் டூப்ளெசிஸ், கிளன் மேக்ஸ்வேல் ஆகியோர்தான் அந்த அணியின் தூண்களாகக் கருதப்பட்டனர். ஆர்சிபி ரசிகர்கள்கூட அவர்களை கேஜிஎஃப் (kohli, glenn maxwell, fab dudplessy) என்று பெருமையாகக் கூறி வருகின்றனர். ஆனால், நேற்றைய போட்டியில் அவர்களுக்கு கேஜிஎஃப் கைகொடுக்கவில்லை. லக்னோ அணி இந்த கேஜிஎஃப்க்கு எதிராக தயாராகி வந்த நிலையில், அவுட் ஆஃப் சிலபஸாக வந்து அசத்தினார் ரஜத் படிதர்.
களத்தில் இறங்கிய ரஜத் படிதர் அதிரடியாக ஆட பெங்களூர் அணியின் ஸ்கோர் கடகடவென உயர்ந்தது. இந்த ஆண்டு ஈ சாலா கப் நம்மளோடதுதான் யா என ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். அதற்கேற்றவாறே ரஜத் படிதர் தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை ஆடி 49வது பந்து வீச்சில் சதமடித்து தெறிக்கவிட்டார். கடைசி நேரத்தில் தினேஷ் கார்த்திக்கும் அதிரடியாக ஆடினார்.
இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 4 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரஜத் படிதர் 54 பந்தில் 122 ரன்களும், கார்த்திக் 23 பந்துகளில் 37 ரன்களும் எடுத்தனர்.
ஒன் மேன் ஆர்மியாக நின்று ஆடி எலிமினேட்டரில் இருந்து பெங்களூர் அணியை குவாலிஃபயர் 2 போட்டிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் படிதர். ஆர்சிபி அணிக்காக பிளே ஆஃப் இல் சதமடித்த முதல் நபர் இவர்தான். அதுமட்டுமல்ல ஐபிஎல் வரலாற்றிலேயே எலிமினேட்டரில் சதமடித்த முதல் நபரும் படிதர்தான்.
யார் இந்த ரஜத் படிதர் தெரியுமா?…
28 வயாதன ரஜத் படிதர் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர். பைப், பிளம்பிங் பொருள்கள் உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டு வரும் இவரது குடும்பத்தினர் ரஜத் படிதரும் பிசினஸ் செய்ய வேண்டும் என்றே நினைத்தனர். ஆனால், படிதரின் ஆர்வமோ கிரிக்கெட் பக்கம் இருந்தது.
இவர் மத்தியப் பிரதேசத்தின் உள்ளூர் அணிக்காக ஏராளமான போட்டிகளில் விளையாடி, பல்வேறு கடினமான காலகட்டங்களில் அந்த அணிக்கு கைகொடுத்துள்ளார். ஆரம்பத்தில் பெளலிங்கில் மட்டுமே சிறப்பு கவனம் செலுத்தி வந்த படிதர் தொடர்ந்து பேட்டிங்கிலும் கவனம் செலுத்தத் தொடங்கினார். முன்னாள் மும்பை கிரிக்கெட்டர் அமே குரேஷியாதான் படிதரின் பேட்டிங்கை வலுவாகக் கட்டமைத்தார்.
2015இல் மத்தியப் பிரதேசத்தின் உள்ளூர் போட்டிகளில் அறிமுகமான படிதர், பெங்காலுக்கு எதிரான விஜய் ஹஜாரே டிராஃபி போட்டியில் அசோக் டின்டா மற்றும் முகமது சமீ பாலை தெறிக்கவிட்டார். அப்போது, இவருடைய டீமில் உள்ள அனைவருமே கட்டாயமாக நீ வேறு இடத்துக்குச் செல்வாய் என இவரைப் பாராட்டியுள்ளனர். ரஞ்சி டிராஃபியில் அறிமுகமானபோதே 3 ஆட்டத்தில் 4 அரை சதமும், 1 சதமும் அடித்துள்ளார். மொத்தம் 7 ஃபர்ஸ்ட் கிளாஸ் சதமும், 3 டொமெஸ்டிக் சதமும் அடித்துள்ளார்.
2018-2019 ரஞ்சி டிராஃபி போட்டியில் தமிழ்நாடு அணிக்கு எதிரான ஆட்டத்தில்196 ரன்கள் அடித்தார். அப்போது, இவர் பெரிய அனுபவம் வாய்ந்த வீரராக இருப்பார் என அனைவரும் நினைத்தனர். ஆனால், அவர் அனுபவம் வாய்ந்தவர் அல்ல என அந்த நினைவுகளைப் பகிர்ந்தார் ம.பி. அணியின் சக வீரர் ஈஸ்வர் பாண்டே.
கடந்த சீசனில் ஆர்சிபி அணிக்காக ரஜத் படிதர் ஆடியிருந்தாலும், 2022 சீசனுக்கான ஏலத்தில் அவரை யாரும் எடுக்கவில்லை. பெங்களூர் அணி ஏலத்தில் எடுத்திருந்த வீரர் லவ்னித் சிசோடி ஐபிஎல்.இல் இருந்து விலகினார். இவருக்கு ரீப்ளேஸ்மென்டாக வந்தவர்தான் இந்த ரஜத் படிதர். ஆர்சிபி அணியில் தலைமைப் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் இவருக்கு வாய்ப்பு கொடுத்ததையடுத்து, இந்த சீசனின் 2ஆம் பாதியில் ப்ளேயிங் லெவனில் படிதருக்கு இடம் கிடைத்தது.
ஸ்டார் பெர்ஃபார்மர்களான கோலி, டூப்ளெசிஸ் நிரம்பிய அணியில் அவர்களுக்கு ஒத்துழைத்து ஆடும் வீரராகவே பார்க்கப்பட்டார் படிதர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் நடந்த சம்பவமே வேற லெவலாக இருந்தது. அணியின் 3 நட்சத்திர வீரர்களும் இணைந்து 34 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தனர். இந்த முறையும் “ஈ சாலா கப் நம் தில்லையா” என ஆர்சிபி ரசிகர்கள் வேதனை அடைந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் வெறித்தனமாக ஆடி 54 பந்தில் 122 ரன்கள் குவித்தார் படிதர்.
போட்டி முடிந்ததும் இதுகுறித்து படிதர் கூறுகையில், நான் கடந்த ஏலத்தில் விலை போகவில்லை. ஆனால், அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. அது என்னுடைய கட்டுப்பாட்டில் இல்லை. வாய்ப்பு கிடைத்த பின்னர் போட்டியில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதிலேயே மிகுந்த கவனம் செலுத்தியிருந்தேன். இன்றைய போட்டியிலும் சதம் அடிக்க வேண்டும் என்று நான் குறியாக இல்லை. நல்ல ஸ்கோரை எடுத்து டீமை நல்ல இடத்துக்கு கொண்டு போக வேண்டும் என்று மட்டுமே நினைத்தேன் என்றார்.
படிதரின் ஆட்டத்தைப் பார்த்து அந்த அணியின் கேப்டன் டூப்ளெசிஸ், கோலி போன்ற சீனியர் வீரர்கள், கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர், ஹர்பஜன் சிங் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ரஜத் படிதரின் இந்த ஆட்டம் அவருக்கு பாராட்டை கொடுத்த அதே நேரத்தில், அவரது எதிரணியினருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. நேற்று பெங்களூர் அணிக்கு கடினமான சூழ்நிலையில் எப்படி படிதர் கைகொடுத்தரோ அதேபோன்ற ஒரு சூழ்நிலையில்தான் லக்னோ அணிக்கும் கேப்டன் கே.எல்.ராகுல் ஆடினார். ஆனால், படிதரைவிட கூடுதலாக இரண்டு பந்துகளைப் பிடித்திருந்தாலும், 59 பந்துக்கு 78 ரன் மட்டுமே அடித்தார். இதனால், லக்னோ அணியால் இலக்கை எட்ட முடியவில்லை. குறிப்பாக மிடில் ஓவர்களில் 7-13 கே.எல்.ராகுல் ஒரேயொரு பவுண்டரி மட்டுமே அடித்தார். படிதரின் அணுகுமுறையும், ராகுலின் அணுகுமுறையும் தற்போது விவாதப் பொருளாகி உள்ளது. படிதர் தன்னுடைய ரெக்கார்டுக்காக இல்லாமல் அணிக்காக ஆடினார். ஆனால், ராகுல் அணிக்காக அல்லாமல் தன்னுடைய தனிப்பட்ட ரெக்கார்டுக்காக ஆடினார் என ரசிகர்கள் அவரைச சாடிவருகின்றனர்.
மேலும், ரஜத் படிதர் என்பதற்கு பிரச்னைகளைத் தீர்ப்பவர் என்ற பொருள் என்றும், ஹனுமனின் மற்றொரு பெயர் என்றும் கூறப்படுகிறது. எனவே, ஆர்சிபி அணியைக் காப்பாற்றிய மத்தியபிரதேசத்தின் ஹனுமான் என்று ரஜத் படிகருக்கு ரசிகர்கள் புகாழாரம் சூட்டி வருகின்றனர்.
-ம.பவித்ரா