ரயில்வே போட்டித் தேர்வு எழுதியோரின் குறைகளைத் தீர்க்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதி தெரிவித்துள்ளார்.
பீகாரில் ரயில்வே ஆள் தேர்வு வாரியம் நடத்திய போட்டித் தேர்வுகளில் முறைகேடு நடந்ததாக கூறி தேர்வு எழுதியவர்கள் மற்றும் மாணவர்கள் கடந்த 2 நாட்களாக பல்வேறு ரயில் நிலையங்களில் தண்டவாளத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சில பகுதிகளில் இந்த போராட்டம் வன்முறையாக மாறியது. நவாடாவில், மாணவர்கள் ரயில் பாதை பராமரிப்பு இயந்திரத்தை தீ வைத்து எரித்தனர், ரயில் நிலைய வளாகங்களை சூறையாடினர். ஆராவில் பகுதியில் ரயில் பெட்டிக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.
இதேபோல் சீதாமர்ஹி, பக்சர், முசாபர்பூர், சாப்ரா, வைஷாலி, கயா ரயில் நிலையம் மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளிலும் ஏராளமான மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக பாட்னா ரயில் காவல் கண்காணிப்பாளர் பிரமோத் குமார் மண்டல் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இது குறித்து பேசியுள்ள ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தேர்வர்களின் குறைகளைக் கேட்டு தீர்வு காண்பதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். இந்த குழுவுக்கு வரும் பிப்ரவரி 16ஆம் தேதி வரை தேர்வர்கள் தங்களது குறைகளை எழுதி அனுப்பலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த குழுவானது, மார்ச் 4 ஆம் தேதிக்குள் மத்திய ரயில்வே அமைச்சகத்துக்கு பரிந்துரைகள் அளிக்கும் என்றும் அவர் கூறினார். எனவே தேர்வர்கள், போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் என்றும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கேட்டுக் கொண்டார்.