காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பிராந்திய கட்சிகள் குறித்து கூறிய கருத்தை அக்கட்சியுடன் கூட்டணியில் உள்ள மாநில கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.
காங்கிரஸை மறுகட்டமைக்க ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் 3 நாள் மாநாடு நடைபெற்றது. இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அந்த மாநாட்டில் ராகுல் காந்தி பேசியபோது, பாஜகவை எதிர்க்க மாநில கட்சிகளிடம் சித்தாந்தம் இல்லை என்று தெரிவித்திருந்தார். பாஜகவை எதிர்க்க காங்கிரஸ் கட்சியில் தான் சரியான சித்தாந்தம் இருக்கிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதனால் தான் காங்கிரஸ் குறித்தும் காங்கிரஸ் முக்கியத் தலைவர்கள் குறித்தும் பாஜக விமர்சிக்காமல் இருக்கிறது என்று கூறியிருந்தார். இந்நிலையில், ஜார்க்கண்டில் காங்கிரஸுடன் கூட்டணியில் இருக்கும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி, ராகுல் காந்தியின் கூற்றை நிராகரிப்பதாக தெரிவித்தது. அக்கட்சி மேலும் கூறுகையில், இது காங்கிரஸ் கட்சியின் விரக்தியைக் காட்டுகிறது என்று தெரிவித்தது.
“ராகுலின் தனிப்பட்ட கருத்து”
ஜார்க்கண்டில் ஆளும் எங்கள் தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகித்து வருகிறது. இருப்பினும், ராகுல் இவ்வாறு தெரிவித்துள்ளார். அது அவரது தனிப்பட்ட கருத்தாக இருக்கக் கூடும். எங்கள் கட்சியிடம் வலிமையான சித்தாந்தம் இருக்கிறது என்று ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் செய்தித்தொடர்பாளர் சுப்ரியோ பட்டாச்சார்யா தெரிவித்தார்.
பிகாரில் பிரதான எதிர்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் செய்தித்தொடர்பாளர் மனோஜ் குமார் ஜா கூறுகையில், ”பாஜகவுக்கு எதிரான சண்டையில் மாநில கட்சிகள் காங்கிரஸுடன் முக்கிய அங்கம் வகித்து வருகிறது. மொத்தம் உள்ள 543 நாடாளுமன்றத் தொகுதிகளில் 320க்கும் அதிகமான இடங்களில் மாநில கட்சிகள் வலிமையாக உள்ளன” என்றார்.
இதனிடையே, மாநில கட்சிகளைக் கண்டு காங்கிரஸ் அச்சப்படுவதாக கர்நாடகத்தில் அக்கட்சியுடன் ஏற்கனவே கூட்டணியில் இருந்த மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசுவாமி தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் காங்கிரஸிலிருந்து விலகி மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருந்த சுஷ்மிதா தேவ் கூறுகையில், ‘பாஜகவால் திமுக தலைவர் ஸ்டாலின், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோரை வீழ்த்த முடியவில்லை. இதனால், காங்கிரஸை எதிர்க்கட்சியாக எண்ணுகிறது. நிதர்சனம் என்னவென்றால் பாஜகவை காங்கிரஸால் வீழ்த்த முடியவில்லை’ என்றார்.