அதானி குழும முதலீட்டில் சீன நபர் ஒருவரின் தொடர்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, இப்பிரச்னை தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
அதானி குழும முறைகேடுகள் குறித்து ராகுல்காந்தி மும்பையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதானி குழுமத்தின் முறைகேடுகள் இந்தியாவிற்கே தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. பிரதமருக்கும், அதானிக்கும் இருக்கும் தொடர்பை 2 பிரபல பத்திரிகைகள் ஆதாரத்துடன் வெளியிட்டிருக்கிறது. இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு மத்திய அரசு சாதகமாக உள்ளது.
அதானி குழுமத்தில் செய்யப்பட்டுள்ள முதலீடுகள் யாருடையது. அதானி குழும முறைகேடுகளில் வினோத் அதானி மட்டுமல்லாமல், சீனாவைச் சேர்ந்த சாங் சுங் லிங்க் மற்றும் நாசர் அலி என்ற இருவருக்கும் தொடர்பு இருப்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து பிரதமர் மோடி விசாரணைக்கு அனுமதிக்காதது ஏன்? .அதானி விவகாரத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து மௌனம் காப்பது ஏன்?. அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும். அதானி குழும முதலீடு குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும்; இது தேசிய பாதுகாப்பு பிரச்னை, தேசிய பாதுகாப்பு துறையிலும், அதானி குழுமம் முதலீடு செய்துள்ளது.
இந்திய பொருளாதாரத்தில் அதானி குழுமம் மட்டும் ஏன் இலவச சவாரி செய்கிறது; அதானி குழுமம் குறித்து, விசாரணை நடத்திய செபி நற்சான்று கொடுக்கிறது; ஆனால் இதில் பெரிய தவறு இருக்கிறது. அதானி மீதான குற்றச்சாட்டுகளை சிபிஐ, அமலாக்கத்துறை விசாரிக்காதது ஏன்?.
நாட்டின் பொருளாதாரம் மற்றும் வணிகம் தொடர்பாக வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும். ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி நாட்டில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளதை வெளிகாட்டியுள்ளது. அதானியால் இந்தியாவில் உள்ள எதையும் எளிதாக வாங்க முடியும்; இது எப்படி?
இவ்வாறு ராகுல் காந்தி பல்வேறு கேள்விகளையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார்.