கே.எல்.ராகுல் மற்றும் கெயிலின் அபார ஆட்டத்தால் மும்பை அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்க்ஸ் எளிதாக வீழ்த்தியது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 17வது ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. முதலில் களமிறங்கிய மும்பை அணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். டி காக், இஷான் கிஷான், ஹர்திக் பாண்ட்யா, குர்னார் பாண்ட்யா என முக்கிய வீரர்கள் பலரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். எனினும், நிலைத்து நின்று விளையாடிய ரோகித் சர்மா 63 ரன்கள் சேர்த்தார். இதனால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை அணி 6 விக்கெட் இழப்புக்கு 131 ரன்களை மட்டுமே எடுத்தது.
132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் மயங்க் அகர்வால் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். எனினும், கே.எல்.ராகுல் கடைசி வரை களத்தில் நின்று 60 ரன்கள் எடுத்தார். அவருடன் இணைந்து அதிரடி காட்டிய கெயில் கடைசிவரை அவுட் ஆகாமல் 43 ரன்கள் எடுத்தார். 18வது ஓவரில் வெற்றி இலக்கை எட்டிய பஞ்சாப் கிங்க்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.







