அமைச்சர் நமச்சிவாயத்தின் ராஜினாமாவால், ஆளும் காங்கிரஸ் ஆட்சிக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சராக பதவி வகித்த நமச்சிவாயம், அம்மாநில காங்கிரசில் முக்கிய அங்கம் வகித்தவர். புதுவை மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் அவர் பதவி வகித்துள்ளார். பாஜகவில் நமச்சிவாயம் இணைய உள்ளதாக சமீபகாலமாக தகவல்கள் வெளியாகின. இதனிடையே காங்கிரஸ் கட்சியில் இருந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பின்னர் தனது அமைச்சர் பதவியையும் எம்.எல்.ஏ பதவியையும் நமச்சிவாயம் ராஜினாமா செய்துள்ளார். விரைவில் அவர் பாஜகவில் இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அமைச்சர் நமச்சிவாயத்தின் ராஜினாமா குறித்து, முதலமைச்சர் நாராயணசாமி பேட்டியளித்தார். நமச்சிவாயம் ராஜினாமா தொடர்பாக காங்கிரஸ் தலைமைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். கட்சி பதவிகளை அனுபவித்துவிட்டு, தற்போது தேர்தல் வரும் நிலையில் நமச்சிவாயம் ராஜினாமா செய்துள்ளதாக சாடிய நாராயணசாமி, காங்கிரஸ் ஆட்சிக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.







