முதலமைச்சர் அழைக்கும் இடத்திற்கு சென்று நேருக்குநேர் விவாதிக்கத் தயார் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தில் இரங்கியுள்ள முதல்வர் பழனிசாமி தன்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க ஸ்டாலின் துண்டு சீட்டு இல்லாமல் வர தயாரா என சவால் விடுத்திருந்தார். இந்நிலையில் முதல்வர் பழனிசாமியின் சவாலை மு.க.ஸ்டாலின் ஏற்றுள்ளார்.
சென்னை திருவொற்றியூரில் திமுக சார்பில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். அப்போது பேசிய ஸ்டாலின், மொழிப்போர் தியாகிகளுக்கு மணிமண்டபம் அமைத்தவர் கருணாநிதி என குறிப்பிட்டார். கருணாநிதி, ஜெயலலிதா இருந்த வரை தமிழகத்தில் நீட் தேர்வு வரவில்லை என கூறிய அவர், திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என உறுதி அளித்தார். பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைக்கும் இடத்திற்கு சென்று, அவருடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.







