புதுச்சேரியில் தனியார் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோவும் பேருந்தும் மோதிய விபத்தில் 8 குழந்தைகள் காயமடைந்தன.
புதுச்சேரி தனியார் பள்ளி ஒன்றில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மூலகுளம் மற்றும் அரும்பார்த்தபுரம் பகுதியை சேர்ந்த சிறுமிகள் வழக்கம் போல் இன்று ஆட்டோவில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது புஸ்ஸி வீதியில் புதிய பேருந்து நிலையம் நோக்கி வந்த போது எதிரே வந்த பேருந்து ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த 8 சிறுமிகளுக்கு தலை, கை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டது.
உடனே அந்த வழியாக சென்ற பொதுமக்கள் விபத்துக்குள்ளான சிறுமிகளை மீட்டு அரசு
பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்ததனர். அங்கு சிறுமிகளுக்கு தீவிர
சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் தகவல் அறிந்து அரசு மருத்துவமனைக்கு வந்த பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டிருப்பதை பார்த்து கண்ணீர் விட்டனர். இந்த விபத்து தொடர்பாக போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, சம்பவம் குறித்து தகவல் அறிந்த துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மருத்துவமனைக்கு நேரில் சென்று, காயம் அடைந்த குழந்தைகளை பார்த்து ஆறுதல் கூறினார். குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் தமிழிசை சௌந்தரராஜன் கேட்டறிந்தார்.
ரெ.வீரம்மாதேவி