நன்னடத்தை கைதிகளை விடுதலை செய்வது தொடர்பான கோப்புகள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி பாளையங்கோட்டை மத்திய சிறையில் கடந்த ஒரு வாரத்தில் ஆயுள் தண்டனை கைதி உட்பட மூன்று பேர் தப்பி சென்ற நிலையில், பாளையங்கோட்டை மத்திய சிறையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாளையங்கோட்டை மத்திய சிறையில் 1378 கைதிகள் தற்போது இருக்கின்றனர் ஆனால் 132 இடங்கள் மட்டுமே இருப்பதால், கூடுதலாக தான் பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகள் இருக்கிறார்கள்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழ்நாட்டு சிறையில் உள்ள சிறைவாசிகளுக்கு தரமான உணவு, பாதுகாப்பு வசதிகள், மருத்துவ வசதிகள் இது சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை இன்று ஆய்வு செய்து இருக்கிறோம். புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் மாவட்ட நீதிமன்றங்கள் அமைக்கப்படும். உயர் நீதிமன்றத்தின் கருத்துரு பெற்று விரைவில் அங்கு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றும் தொடர்ந்து காலியாக உள்ள நீதிபதி பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மதுரை சிறை துறையில் 100 கோடி ஊழல் நடந்ததாக கூறப்பட்டு வரும் நிலையில் அங்கு 100 கோடி அளவிற்கு எந்த வருமானமும் ஈட்டப்படவில்லை என்றும் அதேநேரத்தில் இந்த விவகாரம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் கூறினார். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சிறைச்சாலையில் நவீன வசதிகளுடன் இருப்பதாகவும், முதலமைச்சரின் உத்தரவுப்படி தமிழகத்தில் திறந்தவெளி சிறைச்சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
தமிழகத்தில் நன்னடத்தை கைதிகளை விடுதலை செய்வது தொடர்பான அனைத்து கோப்புகளும் தயார் நிலையில் உள்ளதாகவும் விரைவில் நன்னடத்தை கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
– இரா.நம்பிராஜன்