ரஷியாவில் இருந்து பால்ட்டிக் கடல் வழியாக இயற்கை எரிவாயுவை எடுத்துச் செல்லும் நாா்ட் ஸ்ட்ரீம் குழாய்கள் தகா்ப்பில் உக்ரைன் ஆதரவாளா்களுக்குத் தொடா்பு உள்ளதாக அமெரிக்க ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவுக்கும் ஜெர்மனிக்கும் இடையே பால்டிக் கடலுக்கடியில் குழாய் மூலம் எரிபொருளைக் கொண்டு செல்லும் நார்ட் ஸ்ட்ரீம் -2 எரிபொருள் குழாய்களில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் தங்களுக்குத் தொடர்பில்லை என உக்ரைன் தெரிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுகுறித்து ‘நியூயாா்க் டைம்ஸ்’ நாளிதழில் தெரிவித்துள்ளதாவது: நாா்ட் ஸ்ட்ரீம்-1, நாா்ட் ஸ்ட்ரீம்-2 ஆகிய இரண்டு கடலடி இயற்கை எரிவாயு குழாய்களில் கடந்த ஆண்டு உடைப்பு ஏற்பட்டதற்கு சதிச் செயல்தான் காரணம் என்று கூறப்பட்டது. இதுதொடர்பாக அமெரிக்க உளவுத் துறையும் விசாரணை நடத்தி வந்தது. தற்போது புதிதாக கிடைத்துள்ள உளவுத் தகவலில், நாா்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய்களில் உடைப்பை ஏற்படுத்தியது உக்ரைன் ஆதரவுக் குழுவினா் என்பது தெரியவந்துள்ளதாக அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைனில் போா் தொடுத்த ரஷியா மீது அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் பொருளாதாரத் தடை விதித்துள்ளது. இருப்பினும், எரிசக்தி தேவைக்கு ரஷியாவையே பெரிதும் சாா்ந்திருக்கும் ஐரோப்பிய நாடுகள், போருக்குப் பின்னரும் கூட அந்த நாட்டில் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை தொடா்ந்து இறக்குமதி செய்து வருகின்றன. உக்ரைன் போா் விவகாரத்தில் ரஷியாவுக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த நாட்டிடமிருந்து நிலக்கரி இறக்குமதி செய்வதையும், கப்பல் மூலம் எண்ணெய் கொள்முதல் செய்வதையும் மேற்கத்திய நாடுகள் நிறுத்திவைத்தன.
இருப்பினும், குழாய் மூலம் ரஷியாவிடம் இருந்து எரிவாயு மற்றும் கச்சா எண்ணெயை பல ஐரோப்பிய நாடுகள் தொடா்ந்து இறக்குமதி செய்து வருகின்றன. இந்நிலையில், ரஷியாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்வதன் மூலம் உக்ரைனில் தாக்குதல் நடத்த ரஷிய அதிபா் விளாடிமிர் புதினுக்கு ஐரோப்பிய நாடுகள் பொருளாதார ரீதியில் உதவுவதாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி குற்றம் சாட்டினாா்.
இந்நிலையில், இயற்கை எரிவாயுவை எடுத்துச் செல்ல பால்ட்டிக் கடலடியில் பதிக்கப்பட்டிருக்கும் நாா்ட் ஸ்ட்ரீம்-1, நாா்ட் ஸ்ட்ரீம்-2 ஆகிய இரு குழாய்களில் கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் திடீரென கசிவு ஏற்பட்டது. இதனால் எரிவாயு விநியோகம் தடைபட்டு, பல ஐரோப்பிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்நிலையில், உக்ரைன் ஆதரவாளா்களால் அந்த எரிவாயு குழாய்கள் உடைக்கப்பட்டதாக அமெரிக்க ஊடகம் வெளியிட்டுள்ள தகவல் பேசுபொருளாகியுள்ளது.
இந்நிலையில், இதற்கு உக்ரைன் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சா் ஒலெக்ஸி ரெஸ்னிகோவ், ‘நாா்ட் ஸ்ட்ரீம் எரிவாயுக் குழாய் தகர்ப்பு எங்களுடைய நடவடிக்கை இல்லை’ என்றாா்.
-ம.பவித்ரா