தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் பெண் தொழிலாளர்களுக்கான மகப்பேறு விடுப்பை 6 மாதங்களிலிருந்து 9 மாதங்களாக உயர்த்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று NITI ஆயோக் உறுப்பினர் வி.கே. பவுல் கேட்டுக் கொண்டுள்ளார்.
மத்திய அரசுத்துறைகளில் பணியாற்றும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பாக 9 மாதங்கள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இது ஓராண்டாக உள்ளது. ஆனால், தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் மகளிருக்கான மகப்பேறு விடுப்பு காலம் 6 மாதங்களாக உள்ளது. இதனை உயர்த்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதனை நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பவுலும் வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில், வி.கே.பவுலின் கருத்தை மேற்கோள் காட்டி, அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு இந்திய தொழிற்கூட்டமைப்பின் மகளிர் பிரிவு வேண்டுகை முன் வைத்துள்ளது.
அதில், மகளிருக்கான மகப்பேறு விடுப்பை 6-ல் இருந்து 9 மாதங்களாக உயர்த்துவது குறித்து தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், பச்சிளங்குழந்தைகளின் வளர்ப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடர்பாக இந்திய தொழிற்கூட்டமைப்பின் மகளிர் பிரிவின் தலைவர் சுதா ஷிவ்குமார் கூறுகையில், உலகளாவிய பராமரிப்பு பொருளாதாரம், குழந்தை பராமரிப்பு, முதியோர் பராமரிப்பு மற்றும் வீட்டு வேலைகள் ஆகியவற்றை பெண்கள் கவனித்து வருகின்றனர் என்றார்.







