வயநாடு நிலச்சரிவு: நிவாரண முகாம்களில் தங்கிருக்கும் மக்களை நேரில் சந்தித்தார் பிரதமர் மோடி!

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். கேரளா மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்தது. இந்த பருவமழை…

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

கேரளா மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்தது. இந்த பருவமழை தீவிரமடைந்த நிலையில், கடந்த 29ஆம் தேதி நள்ளிரவில் வயநாடு மாவட்டத்தில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி போன்ற கிராமங்களில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த பயங்கர நிலச்சரிவில் ஆயிரக்கணக்கான வீடுகள் மண்ணோடு மண்ணாகப் புதைந்தன.

வீடுகள், கட்டடங்கள், தேயிலைத் தோட்டங்கள் போன்றவை அங்கு இருந்தன என்பதற்கான சுவடே இல்லாமல் போய்விட்டது. இந்த பேரிடரில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் தேடப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து ஒருவார காலமாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பல்லாயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள் : வினேஷ் போகத்துக்கு வெள்ளி பதக்கம் கிடைக்குமா? இன்று இரவு தீர்ப்பு!

இந்நிலையில், கேரளத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஆக. 10) வயநாடு வந்துள்ளார். கேரளத்தின் கண்ணூர் விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான், முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் அரசு உயரதிகாரிகள் வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் சென்று, வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். பின்னர் கல்பெட்டா பள்ளி அருகே ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி, ராணுவத்தால் கட்டப்பட்ட பெய்லி பாலம் வழியாக நடந்து சென்று சூரல்மலை பகுதியில் பார்வையிட்டார்.

பின்னர், நிலச்சரிவால் வீடுகளை இழந்து முகாம்களில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்துப் பேசினார். வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக பிரதமர் மோடி அறிவிப்பார் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி பார்வையிட்ட பின் மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யும் என கேரள அரசும் எதிர்பார்ப்பில் உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.