ரபேல் போர் விமானத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பயணம்!

ரபேல் போர் விமானத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பயணித்தார்.

ஹரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள விமானப்படை தளத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று வருகை தந்து, ரபேல் போர் விமானத்தில் பயணிப்பார் என்று ஜனாதிபதி மாளிகை நேற்று தெரிவித்திருந்தது. அதன்படி, ரபேல் போர் விமானத்தில் பயணிப்பதற்காக, அம்பாலாவில் உள்ள விமானப்படை தளத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று காலை வருகை தந்தார். அவருக்கு விமானப்படை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ரபேல் போர் விமானத்தில் பயணித்தார்.

முன்னதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கடந்த 2023-ம் ஆண்டு அசாமின் தேஜ்பூர் விமானப்படை தளத்தில் சுகோய்-30 எம்கேஐ போர் விமானத்தில் பயணித்திருந்தார். அவருக்கு முன்பு முன்னாள் குடியரசுத் தலைவர்கள் அப்துல் கலாம் மற்றும் பிரதீபா பாட்டீல் ஆகியோர் சுகோய்-30 எம்கேஐ போர் விமானத்தில் பயணித்திருந்தனர். கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு, பதிலடியாக இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூரின்போது ரபேல் போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.