நிதி மோசடி வழக்கு: ஆரக்கல் இந்தியா நிறுவன தலைவருக்கு நோட்டீஸ்!

ஆரக்கல் இந்தியா நிறுவனத்தின் மூத்த இயக்குநர் பிரதீப் அகர்வால் மற்றும் அவரது மனைவி மீது ஹைதராபாத் போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆரக்கல் இந்தியா என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இந்திய தலைவரும்…

ஆரக்கல் இந்தியா நிறுவனத்தின் மூத்த இயக்குநர் பிரதீப் அகர்வால் மற்றும் அவரது மனைவி மீது ஹைதராபாத் போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஆரக்கல் இந்தியா என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இந்திய தலைவரும் அந்நிறுவனத்தின் மூத்த இயக்குநருமான பிரதீப் அகர்வாலும், அவரது மனைவி மீனு அகர்வாலும் மேட்ஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் பண மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. ஆரக்கல் இந்தியா நிறுவனத்தின் நற்பெயரைப் பயன்படுத்தி, இந்த மோசடி நடத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேட்ஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலம் டிஜிட்டல் மார்க்கெட்டிங் சேவை வழங்கப்படுவதாகக் கூறி, பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து பணம் பெற்றதாகவும், அதன் பிறகு, சேவையை வழங்காமல் காலம் தாழ்த்துவது, கூடுதல் பணம் கேட்டு மிரட்டுவது போன்ற செயல்களில் இவர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பாலியல் வழக்கு தொடுப்போம் என்றும், தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு தொடுப்போம் என்றும் பணம் கொடுத்த வாடிக்கையாளர்கள் சிலரை, மீனு அகர்வால் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்துள்ள ஹைதராபாத் போலீசார், இருவரையும் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளனர். மேலும், பண மோசடியில் ஈடுபடும் இத்தகைய நபர்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.