பாடப்புத்தகங்களில் முதலமைச்சர் மற்றும் ஆளுநரின் அதிகாரங்கள் போன்றவற்றை சேர்க்க பரிந்துரைகள் வந்துள்ளதாக திண்டுக்கல் லியோனி தெரிவித்தார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் லியோனி, “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற குரல் ஆளுநர் மாளிகையில் ஒலித்து ஓராண்டாகிறது. திராவிடம் என்ற வார்த்தையை கண்டுபிடித்தவரும் தமிழ் மொழியிலிருந்துதான் திராவிட மொழிகள் உருவானது என்பதை முதன் முதலில் கூறியவருமான கால்டுவெல் பிறந்தநாளில் ஆட்சி பொறுப்பேற்றது வரலாற்று சிறப்புமிக்கது” என்று குறிப்பிட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் சார்பில் மாபெரும் தமிழ் கனவு, கலைஞரின் குறளோவியம் உள்ளிட்ட நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிடப்படும் எனக் கூறிய லியோனி, “முதலமைச்சரின் அதிகாரங்கள், ஆளுநரின் அதிகாரங்கள், திராவிட தலைவர்களின் வாழ்க்கை வரலாறு போன்றவை பாடப்புத்தகத்தில் கொண்டுவர மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு கோரிக்கை வந்துள்ளது” என்றும் கூறினார்.
மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிந்துரையின் அடிப்படையில் கல்வித்துறை அமைச்சர் மற்றும் முதலமைச்சர் ஒப்புதல் வழங்கினால் 2023 – 24 கல்வியாண்டில் பாடபுத்தகத்தில் சேர்க்கப்படும் என்றும் தெரிவித்தார்.
– சத்யா விஸ்வநாதன், மாணவ ஊடகவியலாளர்.