விடைபெற்றார் போப் பிரான்சிஸ்… புனித மேரி பசிலிக்காவில் உடல் நல்லடக்கம்!

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸின் உடல் நல்லடம் செய்யப்பட்டது.

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் (88) கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக பிரான்சிஸ் ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு அவரின் நுரையீரலில் நிமோனியா பாதிப்பு இருப்பது மருத்துவர்களால் கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி வந்த அவர் சிகிச்சைக்கு அபாய நிலைய தாண்டி விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ஐந்து வார கால சிகிச்சைக்கு பிறகு மார்ச் 23ம் தேதி போப் பிரான்சிஸ் வீடு திரும்பினர். இதற்கிடையே, வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஏப்.21ம் தேதி போப் பிரான்சிஸ் காலமானார். அவரது உடல் கடந்த 23ம் தேதி முதல் வாடிகன் புனித பீட்டர் பேராலயத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து போப் ஆண்டவரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

3 நாட்களில் சுமார் 2.5 லட்சம் பேர் போப்பின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதாக கூறப்படுகிறது. நேற்று (ஏப்.25) மாலை போப் உடல் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டி மூடப்பட்டது. பின்னர் இன்று மதியம் போப் பிரான்சிஸ் உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெற்றது. உலக தலைவர்கள் ஏராளமானோர் புனித பீட்டர்ஸ் சர்ச்சில் இருந்த போப் பிரான்சிஸ் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இந்த இறுதிச் சடங்கு நிகழ்வில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். புனித மரியாள் பேராலயத்தில் போப் பிரான்சிஸ் உடலுக்கு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதனையடுத்து, வாடிகனுக்கு வெளியே உள்ள புனித மேரி மேஜர் பசிலிக்கா பேராலயத்தில் புனித மேரி மேஜர் பசிலிக்காவின் உருவ படத்திற்கு அருகே போப் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.