டி.ஐ.ஜி தற்கொலை விவகாரத்தில் 8 பேருக்கு போலீசார் சம்மன் அனுப்பி ஜூலை 18-ஆம் தேதி விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை ரேஸ்கோர்சில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் போலீஸ் துறையில் உள்ளவர்கள் மத்தியில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.
டி.ஐ.ஜி. தற்கொலை தொடர்பாக கோவை ராமநாதபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர்கள் அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள், அவரது வீட்டில் இருந்தவர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி உள்ளனர். தொடர்ந்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே டி.ஐ.ஜி. தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக சமூக வலைதளங்களில் சிலர் தங்களது கருத்துகளையும் பதிவு செய்தனர். இந்நிலையில், போலீசார் டி.ஐ.ஜி. தற்கொலை தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவு செய்தவர்கள், கருத்து கூறியவர்கள், அதை வெளியிட்ட சமூக ஊடகங்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த திட்டமிட்டனர்.
அதன்படி சில நாட்களுக்கு முன்பு, டி.ஐ.ஜி. தற்கொலை தொடர்பாக கருத்து தெரிவித்தவர்கள், சமூக ஊடகங்களில் பதிவிட்டவர்கள், சமூக ஊடகங்களுக்கு பேட்டி அளித்தவர்கள் என 8 பேருக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். அதில் இவர்கள் அனைவரும் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) கோவை ராமநாதபுரம் காவல் நிலைய போலீசார் முன்பு விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.அப்போது அவர்களிடம் டி.ஐ.ஜி. தற்கொலை தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள் எந்தவித ஆதாரத்தின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டது. யார் அதனை தெரிவித்தது உள்பட பல்வேறு கேள்விகளை கேட்டு அவர்களிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.







