ஷின்சோ அபே நினைவு நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி ஜப்பான் பயணம்

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் நினைவு நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி ஜப்பானுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். ஜப்பானில் நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்தவர் ஷின்சோ அபே (வயது 67). கடந்த ஜூலை…

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் நினைவு நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி ஜப்பானுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஜப்பானில் நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்தவர் ஷின்சோ அபே (வயது 67). கடந்த ஜூலை மாதம் 8ம் தேதி நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவரை டெட்சுய யமகாமி என்பவர் சுட்டுக்கொலை செய்தார். இந்த சம்பவம் உலக நாடுகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச்சடங்கு 12-ம் தேதி டோக்கியோவில் நடந்தது. அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இதற்கிடையே, ஷின்சோ அபே நினைவு நிகழ்ச்சி அந்நாட்டு அரசு சார்பில் நாளை (27ம் தேதி) டோக்கியோவில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உலக தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா கூறுகையில், அரசு சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்துகிற போது, அது ஜப்பான் என்றைக்கும் வன்முறைக்கு அடிபணியாது என்பதை காட்டும். சர்வதேச தலைவர்கள் இரங்கல் தெரிவிக்கவும் வகை செய்யும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஷின்சோ அபே நினைவு நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜப்பான் செல்கிறார் என வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், பிரதமர் மோடி தனது ஜப்பான் பயணத்தின்போது அந்நாட்டின் பிரதமர் புமியோ கிஷிடாவை சந்தித்துப் பேச உள்ளார் எனவும் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் நினைவு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று இரவு நான் டோக்கியோவுக்குச் செல்கிறேன். பிரதமர் கிஷிடா மற்றும் திருமதி அபே ஆகியோருக்கு அனைத்து இந்தியர்களின் சார்பாக இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.