பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக சென்னை வரும் பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இல்லத்திற்கும் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை,தெற்கு இரயில்வேயின் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி நாளை மறுநாள் சென்னைக்கு வரவுள்ளார். நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் விழாவில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கின்றார் பிரதமர் நரேந்திர மோடி.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பிற்பகல் 4 மணியளவில் ஐதராபாத்திலிருந்து விமானம் மூலம் சென்னை வரும் பிரதமரை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், பாஜக நிர்வாகிகள் வரவேற்கவுள்ளனர். சாலை வழியாக மாலை 5.15 மணியளவில் 18 கி.மீ. தூரம் பயணித்து, நிகழ்ச்சி நடைபெறவுள்ள பெரியமேடு ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கத்திற்கு 5.45 மணிக்கு வருகிறார். பிரதமர் வரும் வழிகளில் அவருக்கு வரவேற்பளிக்க பாஜகவினர் திட்டமிட்டுள்ளனர்.
இரவு 7 மணிவரை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு 7.45 மணியளவில் விமான நிலையத்திலிருந்து புறப்படுகிறார்.முன்னதாக ஆழ்வார்பேட்டையிலுள்ள முதலமைச்சர் ஸ்டாலினின் இல்லத்திற்கு செல்லவும் பிரதமர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை விமான நிலையத்திலிருந்து ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி சாலை வழியாக பயணிக்காமல், விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு ஐஎன்எஸ் அடையாறுவிலிருந்து, நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு சாலை வழியாக செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஐஎன்எஸ் அடையாறு வழியாக வந்தால் அங்கு தமிழ்நாடு அரசு சார்பாக வரவேற்பு அளிக்கப்படும் எனக் கூறப்படுகின்றது. சென்னை வரும் பிரதமரிடம் தமிழ்நாடு சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முதலமைச்சர் மனு அளிக்கவுள்ளார்.