“நாட்டு நலனுக்கான திட்டங்கள் மீது அரசியல் சாயம் பூசுகிறார்கள்”- பிரதமர் மோடி வேதனை

நாட்டு நலன் கருதியும், நாட்டு மக்களின் நலன் கருதியும் மத்திய அரசு மேற்கொள்ளும் திட்டங்கள் மீது அரசியல் சாயம் பூசப்படுவதாக பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் ரூ.920 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள “பிரகதி…

நாட்டு நலன் கருதியும், நாட்டு மக்களின் நலன் கருதியும் மத்திய அரசு மேற்கொள்ளும் திட்டங்கள் மீது அரசியல் சாயம் பூசப்படுவதாக பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார்.

தலைநகர் டெல்லியில் ரூ.920 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள “பிரகதி மைதான்“ ஒருங்கிணைந்த போக்குவரத்து வழித்தட திட்டத்தை பிரதமர் மோடி இன்று பொது மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். 1.4 கி.மீ நீள சுரங்கப்பாதை மற்றும் 5 பாதாள சாலைகளை உள்ளடக்கிய இந்த பிரகதி மைதான் திட்டம், டெல்லியின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதில் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, பிரகதி மைதான் திட்டம் தலைநகர் டெல்லியின் நவீன கட்டமைப்புக்கு மத்திய அரசு வழங்கும் பரிசு எனத் தெரிவித்தார். கொரோனா உள்ளிட்ட பல்வேறு தடைகளை தாண்டி இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். உலக அளவில் மிகச்சிறந்த போக்குவரத்து வசதிகள் கொண்ட நகரங்களில் ஒன்றாக தலைநகர் டெல்லியை மாற்றுவதற்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற உள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

நாட்டின் நலனையும், நாட்டு மக்களின் நலனையும் கருத்தில்கொண்டு பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருவதாக கூறிய பிரதமர் மோடி, ஆனால் அவ்வாறு கொண்டு வரப்படும் திட்டங்கள் மீது அரசியல் சாயம் பூசப்படுவதாக வேதனை தெரிவித்தார். அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் பிரதமர் மோடி இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.பிரகதி மைதான் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சுரங்கபாதையை பார்வையிட்ட பிரதமர் மோடி, அந்த சாலையில் கிடந்த குப்பைகளை தானே சென்று அகற்றி தூய்மைப்படுத்தினார்.

 

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.