கொரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்தது மாணவர்களுக்கான சிறந்த முடிவு என பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார்.
சிபிஎஸ்இ 12 -ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்வது மகிழ்ச்சி அளிப்பதாகச் சென்னையைச் சேர்ந்த மாணவரின் தந்தை ஒருவர் பிரதமர் மோடிக்கு ட்விட்டரில் நன்றி தெரிவித்தார். பிரதமர் மோடியை டேக் செய்துள்ள அந்த பதிவில், “12-ம் வகுப்பு மாணவனின் தந்தையை என்ற முறையில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும், கொரொனா தொற்றிலிருந்து மாணவர்களைப் பாதுகாப்பதற்கு பொதுத் தேர்வை ரத்து செய்வதே ஒரே வழியாக இருந்தது” என குறிப்பிட்டிருந்தார்.
அதேபோல் மற்றொரு பெற்றோரும் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதற்குப் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
பெற்றோரின் இந்த ட்விட்டர் பதிவுகளுக்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள பிரதமர் மோடி, “இந்த ஆண்டு மாணவர்களுக்கு குழப்பமான ஆண்டாக அமைந்துள்ளது. வீட்டிலேயே இருப்பதால் மாணவர்களின் வளர் பருவ சந்தோஷம் பறிபோயுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் பொதுத்தேர்வை ரத்து செய்திருப்பது மாணவர்களுக்கான உகந்த முடிவு. இது தொடர்பாக பல்வேறு கட்ட ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. நாடு முழுவதிலும் இருந்து பெறப்பட்ட ஆலோசனைக்குப் பின்னரே மாணவர்களின் நலன் கருதி சிபிஎஸ்இ பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது” என பிரதமர் தெரிவித்துள்ளார்.







