இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே அமெரிக்காவில் குடியேற திட்டமிட்டு கிரீன் கார்டு விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை ஏற்பட்டதையடுத்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். நாட்டில் உணவு, மருந்துபொருட்கள் மற்றும் எரிபொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவியதையடுத்து இலங்கை மக்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து, கடந்த மாதம் அவர் தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து அவர் இலங்கையிலிருந்து தப்பிச் சென்றதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியானது. முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே ராணுவ உதவியுடன் தப்பி அண்டை நாடான மாலத்தீவிற்கு சென்றதகாவும், அங்கிருந்து சிங்கப்பூர் சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிங்கப்பூரில் சில வாரங்கள் தங்கிய கோத்தபய ராஜபக்சே பின்னர் அங்கிருந்து தாய்லாந்து சென்றதாக கூறப்படுகிறது. அவர் இலங்கையை விட்டு தப்பியோடிய பிறகு மக்களின் முன்பு தோன்றவும் இல்லை, எந்த கருத்தையும் அவர் கூறவில்லை.
இந்நிலையில் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது வழக்கறிஞரின் ஆலோசனைப்படி அடுத்த வாரம் இலங்கைக்கு திரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து இலங்கை ஊடகங்களில், கோத்தபய ராஜபக்சேவின் மனைவி ஐயோமா ராஜபக்சே அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளதால் கோத்தபய ராஜபக்சேவிற்கு அமெரிக்க குடியுரிமை பெறுவதற்கான விண்ணப்ப நடைமுறைகளை கடந்த மாதம் தொடங்கிவிட்டதாக அவரின் அமெரிக்க வழக்கறிஞர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.