தமிழ்நாட்டில் நடப்பாண்டில் புதிய 20 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அனைத்துப் பகுதிகளுக்கும் சீரான உயர் கல்வி வழங்குவதற்கும், மாணவர் சேர்க்கை விகிதாச்சாரத்தை அதிகப்படுத்துவதற்கும், கடந்த அதிமுக ஆட்சியில் 10 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைத் தொடங்குவதற்கும் வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி விருதுநகர் மாவட்டம் – திருச்சுழி, கள்ளக்குறிச்சி மாவட்டம் – திருக்கோயிலூர், ஈரோடு மாவட்டம் – தாளவாடி, திண்டுக்கல் மாவட்டம் – ஒட்டன்சத்திரம், திருநெல்வேலி மாவட்டம் – மானூர், திருப்பூர் மாவட்டம் – தாராபுரம், தருமபுரி மாவட்டம் – ஏரியூர், புதுக்கோட்டை மாவட்டம் – ஆலங்குடி, வேலூர் மாவட்டம் – சேர்க்காடு ஆகிய இடங்களில் புதிய இருபாலர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், திருவாரூர் மாவட்டம் – கூத்தாநல்லூரில் புதிய அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் தொடங்கப்படும் என அப்போதைய உயர்கல்வித்துறை தெரிவித்தது.
அதன்படி புதிய கல்லூரிகளின் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது ஆட்சியில் உள்ள திமுக அரசு நடப்பு கல்வியாண்டில் 20 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என அறிவித்துள்ளது. கல்லூரி தொடங்குவதற்கான ஆயத்தப்பணிகளை மேற்கொள்ள அனுபவமிக்க மூத்த பேராசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் உயர்கல்வித்துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே பிற அரசுக் கல்லூரிகளில் பல ஆண்டுகளாக பணியாற்றிவரும் அனுபவமிக்க மூத்த பேராசிரியர்கள் 20 பேர், புதிதாக தொடங்கப்பட உள்ள 20 கல்லூரிகளுக்கு மாற்றுப்பணியில் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது. 20 புதிய கல்லூரிகளுக்கும் முறையான முதல்வர் நியமிக்கப்படும் வரை, அந்த 20 பேராசிரியர்களும் முதல்வர் பொறுப்பில் இருந்து கல்லூரி தொடங்குவதற்கான ஆயத்தப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது 91 கலைக்கல்லூரிகளும், 7 கல்வியியல் கல்லூரிகளும், 40 பல்கலைக்கழக கல்லூரிகளும் செயற்பட்டு வருகின்றன. இந்நிலையில், புதிதாக 20 கலைக்கல்லூரிகள் சேர்க்கப்படும் பட்சத்தில் 111 கல்லூரிகளாக அதிகரிக்கப்படுவதோடு, மாணவர்களுக்கும் சீரான உயர் கல்வியை வழங்க முடியும் என கல்வியாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
– இரா.நம்பிராஜன்








