குடியரசு தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் திரௌபதி முர்மு ஆதரவு திரட்டும் நிகழ்வில் பங்கேற்பதற்காக நட்சத்திர விடுதிக்கு வந்திருந்த ஓ,பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் ஒரே மேடையில் தோன்றவில்லை. மரியாதை நிமித்தமான சந்திப்புகளைக்கூட தவிர்க்கும் அளவிற்கு இருதரப்பினருக்கிடையே விரிசல் விஸ்வரூபம் அடைந்துள்ளதையே இந்த சம்பவம் உணர்த்துவதாகக் கூறப்படுகிறது.
ஒற்றைத் தலைமையா, இரட்டை தலைமையா என அதிமுகவில் எழுந்துள்ள சர்ச்சை நாளுக்கு நாள் வீரியமடைந்து வந்தநிவையில், ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பு இடையே சமாதானத்தை விரும்புவர்கள் ஜூலை 2ந்தேதியை ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான திரௌபதி முர்மு ஆதரவு கேட்டுவரும் இந்த நாளில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஒரே மேடையில் திரௌபதி முர்முவுடன் தோன்றுவார்கள், அப்போது ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே கண்கள் பணித்து இதயம் இனித்து தாங்கள் நினைக்கும் சமாதானம் நிகழலாம் என அவர்கள் எண்ணியிருந்தார்கள். இருதரப்பிற்கும் இடையே சமரசத்தை ஏற்படுத்த எஞ்சியுள்ள வாய்ப்பாகவும் இந்த நிகழ்வு பார்க்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆனால் ஜூலை 2ந்தேதியான இன்று நடந்ததோ வேறு. திரௌபதி முர்மு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினரை சந்தித்த சென்னை தாஜ் கோரமண்டல் நட்சத்திர விடுதியில் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும், எதேச்சையாககூட ஒருவரை ஒருவர் எதிர் எதிரே சந்தித்துக்கொள்ளவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு சென்ற பிறகுதான் திரௌபதி முர்முவை சந்திக்க அரங்கிற்குள் நுழைந்தார் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம். பாஜகவை பொறுத்தவரை இரு தரப்பில் யாரை ஆதரிப்பது என இதுவரை வெளிப்படையாக ஆதரிக்கவில்லை. ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இருவரையும் சம அளவிலேயே வைத்து அக்கட்சி பார்ப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் அதிமுகவின் உட்கட்சி பிரச்சனையில் தாங்கள் தலைமையிட மாட்டோம் என பாஜக பலமுறை கூறிவிட்டது. எனவே இன்றைய நிகழ்வில் ஓபிஎஸ், இபிஎஸ் சந்திப்பு நிகழாமல் இருப்பதை சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் முன்கூட்டியே திட்டமிட்டு உறுதிசெய்ததாகவே பார்க்க வேண்டியுள்ளது.
இது ஒரு புறம் இருக்க இரு தரப்பினருக்கிடையேயான பலப்பரிட்சை களம்போலவும் இந்த நிகழ்வு மாறியிருந்தது. 62 அதிமுக எம்.எல்.ஏக்ககளுடன் மேடையேறி திரௌபதி முர்முவுக்கு அதிமுகவின் ஆதரவை தெரிவித்து தனது பலத்தை நிரூபித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. அதே நேரம் தற்போதும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தாம்தான் என கூறும் ஓ.பன்னீர்செல்வத்துடன் 2 எம்.எல்.ஏக்களே உடன் சென்றனர். எனினும் மனம் தளராத ஓ.பன்னீர்செல்வம், நிகழ்வு முடிந்து செய்தியாளர்களிடம் பேசும்போது, கட்சி விதிகளின்படி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் தற்போதும் தாம்தான் எனக் கூறி, இந்த விவகாரத்தில் தாம் ஓய்ந்துபோய்லிடவில்லை என சுட்டிக்காட்டினார். எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஒற்றைத் தலைமையையே அதிமுக தொண்டர்களும் நிர்வாகிகளும் விரும்பவுதாக கூறி தங்கள் தரப்பு ஜூலை 11ந்தேதி பொதுக்குழுவிற்காக ஆர்வமுடன் காத்திருப்பதை சுட்டிக்காட்டினார். அதிமுகவில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு ஓ.பன்னீர்செல்வம்தான் காரணம் எனக் கூறிய ஜெயக்குமார். அவரிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், முடிவு எட்டப்படாத சூழலுக்கு அவர்தான் காரணம் என்றும் கூறினார்.
கட்சி தங்களது கட்டுப்பாட்டிற்குள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என இரு தரப்பும் சட்டப்போராட்டங்களில் ஒருபுறம் ஈடுபட்டு வருகின்றனர். மறுபுறம் அறிக்கைகள், பேட்டிகள் மூலமாக நடைபெறும் வார்த்தை மோதல்கள் சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில் அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே சமாதானத்திற்கான அறிகுறிகள் தென்படவில்லை, நீருபூத்த நெருப்பாகவே உட்கட்சி பிரச்சனை தொடர்ந்து உள்ளது என்பதையே ஒ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமிமும் மரியாதை நிமித்தமாகக் கூட இன்று சந்தித்துக்கொள்ளாதது உணர்த்துவதாகக் கூறப்படுகிறது.
எஸ்.இலட்சுமணன்