ஓபிஎஸ் மன்னிப்பு கேட்டாலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று இபிஎஸ் ஆவேசமாக பேட்டி அளித்தார்.
அதிமுக தலைமை அலுவலகத்துக்கு இன்று சென்றார் இபிஎஸ். அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பொதுக் குழுவில் ஒருமனதாக எதிர்கால நன்மை கருதி ஒற்றைத் தலைமை முடிவு செய்யப்பட்டது. இடைக்கால பொதுச் செயலாளராக என்னை தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி. திமுக அரசு வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு சிலரை கட்சி அலுவலகத்திற்குள் அனுமதித்து நுழைந்து கதவுகளை உடைத்துள்ளனர். பொருட்கள் சேதமடைந்துள்ளன.
வேண்டுமென்றே திட்டமிட்டு கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டவர்கள் மீது புகார் அளித்தோம். திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நீதிமன்றத்தை நாடினோம். நீதிமன்றமும் உத்தரவிட்டது. நேற்று தான் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். திமுக அரசில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. அதிமுகவில் பிளவு என்பது கிடையாது. சிலர் துரோகம் செய்தார்கள். அவர்கள் நீக்கப்பட்டார்கள். ஓபிஎஸ் மன்னிப்பு கேட்டாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஓபிஎஸ் பச்சோந்தியை விட ஆபத்தானவர். சந்தர்ப்பத்திற்கு ஏற்றார் போல மாறுவார். ஒரு அதிமுக எம்எல்ஏவை கூட திமுகவால் அசைக்க முடியவில்லை. அதிமுகவை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. ஆர்.எஸ்.பாரதியை தேர்தலில் போட்டியிடச் சொல்லுங்கள் பார்க்கலாம்.
திமுகவைப் பொறுத்தவரை ஆட்சியில் இருக்கும் போது ஒரு பேச்சு, இல்லாத போது ஒரு பேச்சு. திமுகவுக்கு பொய் பேசுவதற்காக நோபல் பரிசு வழங்கலாம். ஓ.பன்னீர்செல்வம் எந்த உண்மையை வெளிப்படுத்த போகிறார் ? தொடர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு தான் வருகிறேன்.
சூதாட்டத்திற்கு தடை விதிக்க யாராவது கருத்து கேட்பார்களா ? எதுவுமே தெரியாத முதலமைச்சர் தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கிறார் என்றார் எடப்பாடி பழனிசாமி.