பெங்களூருவில் வரும் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் ஆலோனை கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பா.ஜ.க தலைமையிலான கூட்டணிக்கு எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் சார்பில் பாட்னாவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் 17 கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதனைதொடர்ந்து எதிர்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் 17-18ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் மொத்தம் 24 கட்சி பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக மதிமுக , கொங்கு தேசிய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், உள்ளிட்ட ஏழு புதிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளும் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி எதிர்க்கட்சி தலைவர்களுக்கு விருந்தளிக்கிறார். பாட்னா கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே , ராகுல் காந்தி பங்கேற்ற நிலையில், தற்போது சோனியா காந்தி பங்கேற்கிறார்.
பாட்னா கூட்டத்தில் பங்கேற்ற தேசியவாத காங்கிரஸ் கட்சி சரத்பவார் மற்றும் அஜித் பவார் இடையே தற்போது பிளவு ஏற்பட்டுள்ளது. மேலும் முதல் கூட்டத்தில் பங்கேற்ற அஜித் பவார் அணியை சேர்ந்த பிரபுல் படேல், கூட்டத்தை கேலி செய்ததோடு, அனைத்து கட்சிகளும் வெவ்வேறு நோக்கங்களைக் கொண்டது என கூறியுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.