தமிழ்நாட்டில் 29 பேருக்கு புதிதாக ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் இருந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் சற்று அதிகரித்து வருகிறது. வழக்கமான மரபணு பகுப்பாய்வுக்கு 139 மாதிரிகள் அனுப்பப்பட்டன. இதில் 8 பேருக்கு BA5 வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 4 பேருக்கு BA 4 வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவை இரண்டுமே ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் ஆகும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி இளைஞர் மேம்பாடு பயிற்சி மையத்தில் மேலும் 29 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே 2 பேருக்கு தொற்று இருந்த நிலையில் தற்போது 21 மாணவிகள், 8 மாணவர்களுக்கு என மொத்தம் 29 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று உறுதி செய்யப்பட்ட 29 பேரும் பயிற்சி மையத்திலே தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தை பொருத்தவரை 17 மாவட்டங்களில் சிறிது சிறிதாக கொரோனா தொற்று பரவ துவங்கி உள்ளது. இதற்கு முன்னால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மட்டுமே பெரிய அளவிலான பாதிப்பு இருந்த நிலை மாறி 17 மாவட்டங்களில் ஒன்றிரண்டு என 150 வரை வந்துள்ளதாகவும், அதை தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.