தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் 27% ஓபிசி இடஒதுக்கீடு குறித்து ஆராய இந்திய பார் கவுன்சிலுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாக மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு குறைந்தபட்சம் 27% இட ஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு அவர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி இராமதாஸ், கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த கடிதத்தில், ’’தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள 23 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில், மாணவர் சேர்க்கைக்கான இடங்களில், குறிப்பிட்ட விழுக்காடு இடங்கள் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படுகின்றன; மீதமுள்ள இடங்கள் மாநில ஒதுக்கீடாக அறிவிக்கப்பட்டு, சொந்த மாநில மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன.
இவற்றில் பெரும்பான்மையான தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. அனைத்து தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களிலும் ஓபிசி இடஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
அதற்கு பதிலளித்து மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அனைத்து சட்டக் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் வகையில், சட்டக் கல்வியின் தரம் குறித்து விதிகளை வகுக்கும் அதிகாரம் இந்திய பார் கவுன்சிலுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும், அதன்படி சட்டப் பல்கலைக்கழகங்களில் ஓபிசி இட ஒதுக்கீடு குறித்து ஆராய்வதற்காக அன்புமணி இராமதாஸ் எழுதிய கடிதம் பார் கவுன்சிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு குறைந்தபட்சம் 27% இடஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதி செய்ய பாமக தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என அன்புமணி இராமதாஸ் உறுதியளித்துள்ளார்.