டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக்கின் ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில், மத்திய வரியில் மாநிலங்களுக்கான பங்கை அதிகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முதலமைச்சர்கள் வலியுறுத்தினர்.
நாட்டின் பொருளாதார கொள்கைகளை வகுப்பது உள்ளிட்டவற்றில் முக்கிய பங்காற்றிவரும் நிதி ஆயோக்கின் 7வது ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் டெல்லியில் இன்று பிரதமரும் நிதிஆயோக்கின் தலைவருமான நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிதி ஆயோக் ஆட்சிமன்றக்குழுவில் உறுப்பினர்களாக உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்தக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் ஏற்கனவே அறிவித்திருந்தார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு எழுதியிருந்த கடிதத்தில் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் மத்திய அரசசு பாரபட்சம் காட்டுவதாகவும் அதனைக் கண்டிக்கும் வகையில் நிதி ஆயோக்கின் 7வது ஆட்சி மன்றக் குழு கூட்டத்தை புறக்கணிப்பதாகவும் சந்திரசேகர ராவ் தனது கடிதத்தில் தெரிவித்திருந்தார். நிதி ஆயோக் அமைப்பால் எந்த பயனும் இல்லை என்றும் தனது கடிதத்தில் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியிருந்தார். தாம் ஏற்கனவே அறிவித்தப்படி இன்றைய கூட்டத்தில் சந்திரசேகர ராவ் பங்கேற்கவில்லை.
வேளாண் உற்பத்தியை அதிகரித்தல், எண்ணெய் வித்துக்கள், நவதானியங்கள் உற்பத்தியில் தற்சார்பு அடைதல், கல்விக் கொள்கைகளை அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இன்றையக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. கூட்டத்தில் பங்கேற்ற சத்தீஷ்கர் முதலமைச்சர் புபேஷ் பாகல், மத்திய வரியிலிருந்து மாநிலங்களுக்கான பங்கீட்டை அதிகரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அதே போல் ஜிஎஸ்டி இழப்பீடு தொகை வழங்குவதை 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் பேசும்போது, மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் பிரச்சனை ஏற்படும்போது நிதி ஆயோக் அமைப்பு ஒரு நடுவர் மன்றம்போல் இருந்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன.
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய, நிதிஆயோக்கின் தலைமை செயல் அதிகாரி பரமேஸ்வரன் ஐயர் இன்றையக் கூட்டம் மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாகத் தெரிவித்தார். மாநிலங்களின் முதலமைச்சர்கள் சிறந்த ஆலோசனைகளை கூட்டத்தில் வழங்கியதாகவும் அவர் கூறினார்.
2019ம் ஆண்டுக்கு பின்னர் நிதி ஆயோக்கின் ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் முதல்முறையாக நேரியடையாக நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.