மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கலின்போது, பெண்களுக்கான புதிய சிறுசேமிப்புத் திட்டமான மகிளா சம்மான் சேமிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
பெண் குழந்தைகள் மற்றும் பெண்களின் நலனுக்காக பல்வேறு சேமிப்புத் திட்டங்கள் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், பெண் குழந்தைகளுக்கு 1.5 லட்சம் ரூபாய் வரை சேமிக்கும் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் ஏற்கனவே உள்ளது. இதன் முதிர்வுக் காலம் 21 ஆண்டுகள் ஆகும். இருப்பினும் 18 வயதிற்குப் பின்னர் இந்த சேமிப்பில் இருந்து பாதி அளவு தொகையை எடுத்துக் கொள்ளலாம்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதே போல, 15 ஆண்டுகளில் முதலீட்டின் இரட்டிப்பு தொகையை வழங்கும் சுகன்யா சம்ரிதி திட்டமும் 10 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு உள்ளது. இவை அனைத்தும் நீண்டகால சேமிப்புத் திட்டங்களாகும்.
இந்நிலையில், குறைந்த காலத்தில் அதிக வட்டி தரும் மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் என்ற பெண்களுக்கான புதிய சிறு சேமிப்பு திட்டத்தை இந்த பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகம் செய்து வைத்துள்ளார். இத்திட்டத்தில் பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் தங்கள் பெயரில் அதிகபட்சமாக ரூ. 2 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்.
அதிக வட்டி: மகிளா சம்மான் சேமிப்புத் திட்டத்தில் 7.5 சதவீதம் நிலையான வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இது வங்கி வைப்புத் தொகை, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம், பொது வருங்கால வைப்பு நிதி, செல்வ மகள் சேமிப்புத் திட்டம் போன்ற பிரபல முதலீட்டுத் திட்டங்களின் வட்டி விகிதங்களை விட அதிகமாகும்.
குறைந்த முதிர்வுக் காலம்: மற்ற சிறு சேமிப்புத் திட்டங்களைப் போல நீண்டகால முதலீடாக இல்லாமல் குறுகிய காலத்திற்குள் அதிக தொகையை சேமிப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதன் முதிர்வுக் காலம் 2 ஆண்டுகள் மட்டுமே. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மகிளா சம்மான் சேமிப்பு பத்திரத்தின்கீழ் புதிய சிறுசேமிப்பு வசதி 2023 மற்றும் 2025-க்கு இடையே 2 ஆண்டுகளுக்கு இருக்கும்.
வரிச் சலுகைகள் உள்ளதா?: பொது வருங்கால வைப்பு நிதி, மூத்த குடிமக்கள் சிறு சேமிப்புத் திட்டம், தேசிய சேமிப்புச் சான்றிதழ், சுகன்யா சம்ரிதி யோஜனா போன்ற சேமிப்புகளைப் போல பிரிவு 80சியின் கீழ், மகிளா சம்மான் சேமிப்பு தொகையையும் வரி சலுகைக்கு காட்டலாம்.
அதேபோல, இத்திட்டத்தில் உள்ள தொகையை முதிர்ச்சி காலத்திற்கு முன்பே எடுக்க வேண்டும் என்றால், மொத்த சேமிப்புத் தொகையில் பகுதியளவு தொகையை திரும்பப் பெறும் வசதியும் உள்ளது. இத்திட்டத்தின் விவரங்கள் அரசால் இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை. இந்த திட்டத்தை ஏப்ரல் 1, 2023 முதல் அனைத்து அரசு வங்கிகளிலும், அஞ்சல் அலுவலகங்களிலும் திறக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
-ம.பவித்ரா