பரவி வரும் நிபா வைரஸ் காரணமாக, கேரள மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்தில் பழ வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நிபா வைரஸ் தடுப்ப வழிகாட்டு நெறிமுறைகளில், வௌவால்கள் கடிக்கப்பட்ட பழங்களை மக்கள் சாப்பிட வேண்டாம் என்று கேரள அரசு அறிவுறுத்தியிருந்தது. இதனால், மக்கள் ஒட்டுமொத்தமாக பழங்கள் வாங்குவதையே தவிர்த்துவிட்டுள்ளனர். கேரள மாநிலத்தில் விற்பனை செய்யப்படும் பழங்கள் எல்லாமே பெரும்பாலும் வெளிமாநிலங்களில் உற்பத்தியாகும் பழங்கள் தான்.
கடந்த சில நாள்களாக 70% அளவுக்கு மொத்த வியாபாரம் பாதிக்கப்பட்டிருப்பதாக வியாபாரிகள் கூறுகிறார்கள். ஒரு லாரி பழங்கள் ஒரு நாளில் விற்றுத் தீரும். ஆனால், மூன்று நாள்களுக்கு முன்பு வந்த லாரி பழத்தில் 50% கூட விற்பனையாகவில்லை என கூறப்படுகிறது. விற்பனையாகாத பழங்கள் பெரும்பாலும் அழுகிவிடும் என்றும் கவலை தெரிவித்துள்ளனர்.
கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதிக்கப்பட்டு கடந்த வாரம் திங்கள்கிழமை இருவர் உயிரிழந்தனர். அவர்களில் ஒருவரின் 9 வயது மகன் உள்பட 4 போ் நிபா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இதையடுத்து தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது நிபா தொற்றின் பரவல் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.







