நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி காரணமாக தேனி மாவட்டம், ஓடைப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் சிறுமி உயிரிழந்த இடத்தைச் சுற்றி தடுப்புகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தேனி அருகே பூங்கா அமைப்பதற்குத் தோண்டிய பள்ளத்தில் விழுந்து 8 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில், கருவேல மரங்களை வெட்டிப்போட்டு ஆபத்தான முறையில் குழிகள் மறைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வருசநாடு மூலக்கடை பகுதியைச் சேர்ந்த கார்த்திகா, ஓடைப்பட்டி சமத்துவபுரத்தில் வசித்துவரும் தந்தை ரங்கநாதன் வீட்டிற்கு, தனது 8 வயது மகள் ஹாசினி ராணியை அழைத்து வந்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சமத்துவபுரம் பகுதியில் தாத்தாவின் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ஹாசினி ராணி இயற்கை உபாதை கழிப்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது, பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் அப்பகுதியில், பூங்கா அமைப்பதற்காக தோண்டப்பட்ட சுமார் 7 அடிபள்ளத்தில் எதிர்பாராத விதமாக சிறுமி விழுந்ததாக கூறப்படுகிறது. அந்தப் பள்ளத்தில் மழை நீர் அதிகளவில் இருந்ததால் சிறுமி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சிறுமி உயிரிழந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்தும், மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிகாரிகள் யாரும் இதுவரை வரவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பூங்காவிற்காக தோண்டப்பட்ட குழி அருகே எவ்வித முன்னெச்சரிக்கை அறிவிப்புப் பலகையும் வைக்கப்படவில்லை. அதற்கு மாறாக, சிறுமி உயிரிழந்து இரண்டு நாட்களாகியும், உயிர்பலி வாங்கிய பள்ளங்களில் கருவேல மரங்களை வெட்டிப்போட்டு, ஆபத்தான முறையில் குழிகள் மறைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக, மாவட்ட ஆட்சியர் முரளிதரன், பேரூராட்சித் தலைவர் தனுஷ்கோடி முன்னிலையில் சிறுமியின் தந்தையை சந்தித்து பேசினார். அப்போது தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் முரளிதரன் உறுதியளித்தார்.
நிவாரணம் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக ஆட்சியர் தெரிவித்ததாக நியூஸ் 7 தமிழிடம் சிறுமியின் தந்தை கூறினார்.
இந்நிலையில், சிறுமி தவறி விழுந்த குழியைச் சுற்றிலும் தடுப்புகள் அமைக்கும் பணிகளும், பொது கழிப்பிடத்தை சீரமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.