அனைத்து சாதியினர் அர்ச்சகராக புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று
தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பயிற்சியும் தகுதியும் உள்ள அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று 2020இல் அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் ஓர் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதன் பெயர் “தமிழ்நாடு இந்து சமய நிறுவன ஊழியர்கள் (பணி நிபந்தனைகள்) விதிகள் – 2020” என்பதாகும். இதில் உள்ள 7 மற்றும் 9 ஆகிய விதிகள் அர்ச்சகர்கள் மற்றும் இதரக் கோயில் ஊழியர்களை அமர்த்தும் அதிகாரத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு வழங்குகின்றன. இந்த அதிகாரிகளைத் தக்கார் (Fit Persons) என்று இந்த ஆணை கூறுகிறது.
இந்த ஆணையைப் பயன்படுத்தி, 2021 ஆகஸ்டு 14ஆம் நாள் இப்போதைய தி.மு.க ஆட்சி, 24 அர்ச்சகர்களைப் பல்வேறு கோயில்களில் அமர்த்தியது. இவர்கள் அனைவரும் தமிழ்நாடு அரசு நடத்திய அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் பயின்று, தகுதிச் சான்றிதழ் பெற்றவர்கள்.
இந்த இருபத்து நான்கு பேரையும் அர்ச்சகர்களாகப் பணியமர்த்தியதும், மேற்படி அரசாணையும் இந்து சமய அறநிலையத் துறைச் சட்டம் 1959-க்கும், ஆகம விதிகளுக்கும் எதிரானவை; இந்த அரசாணையை நீக்கி, 24 பேர் பணி அமர்த்தலையும் நீக்க வேண்டும் என்று கோரி அனைத்திந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் தலைவர் பி.எஸ்.ஆர். முத்துக்குமார், ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த டி.ஆர். இரமேசு உள்ளிட்ட சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.
இவ்வழக்கை எதிர்த்துத் தமிழ்நாடு அரசும் அதன் இந்து சமய அறநிலையத்துறை ஆணையரும் வழக்கு நடத்தினர். அரசுத் தரப்பில் தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம் வாதிட்டார்.
இந்த வழக்கை விசாரித்து, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி – நீதிபதி என். மாலா அமர்வு 22.08.2022 அன்று தீர்ப்பு வழங்கியது.
இந்து சமய அறநிலையத் துறைச் சட்டம் 1959-இன்படி, திருக்கோயில்களின் அறங்காவலர் குழுக்கள் தாம், அர்ச்சகர்களைப் பணி அமர்த்த வேண்டும், அதுவும் அந்தந்த கோயிலுக்குரிய ஆகமப்படியும், அந்தந்த ஆகமத்தைச் சேர்ந்த குடும்பங்களில் பிறந்தவர்களை மட்டுமே அர்ச்சகர்களாகப் பணி அமர்த்த வேண்டும் என்ற மனுதாரர்களின் கோரிக்கைகளில், அறங்காவலர்கள் மட்டுமே பணி அமர்த்தும் அதிகாரம் பெற்றவர்கள் என்ற கோரிக்கையை நிராகரித்து, ஆகமக் கோயில்களில் அவற்றிற்குரிய ஆகமக் குடும்பங்களில் பிறந்தவர்களையே அர்ச்சகராக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக் கொண்டு நீதிபதிகள் முனீஸ்வர் நாத் பண்டாரியும், என். மாலாவும் தீர்ப்பளித்தனர்.
பணி அமர்த்தத்திற்கான மேற்படி அரசு ஆணை விதிகள் 7 மற்றும் 9 ஆகியவை அர்ச்சகர் பணி அமர்த்தத்துக்கு மட்டும் இல்லாமல், கோயில்களில் உள்ள மற்ற பணியாளர்களையும் அமர்த்தும் அதிகாரம் கொண்டிருப்பதால் அவ்விதிகளை ரத்துச் செய்யவில்லை என்று தீர்ப்பில் கூறியுள்ளார்கள்.
அத்துடன், தமிழ்நாட்டில் அறநிலையத் துறையில் உள்ள 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்களில் எது, எது – எந்தெந்த ஆகமப்படி கட்டப்பட்ட ஆகமக் கோயில் என்று கண்டறிந்து அறிக்கை தர, ஓர் ஆய்வுக் குழுவையும் அமைக்குமாறு நீதிபதிகள் தமிழ்நாடு அரசைப் பணித்தனர்.
ஐந்து பேரைக் கொண்ட அந்த ஆய்வுக்குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி சொக்கலிங்கம் அவர்களையும், சமற்கிருத – பிராமணப் பிரிவுப் பிரதிநிதியாக – சென்னை சமற்கிருதக் கல்லூரியின் தலைமை நிர்வாகி என். கோபால்சாமி என்பவரையும், நீதிபதி முனீசுவர் நாத் பண்டாரி அமர்வு அமர்த்திவிட்டது.
இதில் தமிழ்நாடு அரசுக்கு வேலை இல்லை. இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் இக்குழுவில் உறுப்பினராக இருப்பார். மேலும், இருவரைத் தமிழ்நாடு அரசு உறுப்பினர்களாக அமர்த்த வேண்டும். ஒரு மாத காலத்திற்குள் இக்குழு அமைக்கப்பட வேண்டும். அதன் பிறகு இக்குழு ஆகமக் கோயில்கள் எவை எனக் கண்டறியும் பணியைத் தொடங்க வேண்டும்.
இத்தீர்ப்பை, “வரலாறு படைக்கும் வெற்றித் தீர்ப்பு” என்று திராவிடர் கழகத் தலைவர் ஐயா கி. வீரமணி அவர்கள் வரவேற்றுள்ளது வியப்பை அளிக்கிறது. பா.ச.க. தலைவர் அண்ணாமலையோ, “தமிழர் வாழ்வியல் முறையைத் திராவிட மாடலாக ஆக்க முடியாது என்று இத்தீர்ப்பு திட்டவட்டமாகக் கூறுகிறது என்று பாராட்டி வரவேற்றுள்ளார்.
மிகவும் பிரபலமாக உள்ள சிவநெறி, திருமால் நெறிக் கோயில்களை ஆகமக் கோயில்கள் என்று ஏற்கெனவே அவற்றில் ஆதிக்கம் செலுத்துவோர் பட்டியலிடுவர். அவற்றில் எல்லாம் எப்போதும் தகுதியுள்ள அனைத்துச் சாதித் தமிழர்கள் அர்ச்சகர்கள் ஆக முடியாது. பிரபலமான கோயில்கள் அனைத்திலும், இத்தீர்ப்பின்படி பிராமணர்களே அர்ச்சகர்களாக இருப்பார்கள். கருவறைக்குள் தீண்டத்தகாதவர்களாகவே தகுதியுள்ள தமிழ் ஆன்மிகர்கள் விலக்கப்படுவார்கள். இத்தீண்டாமை – இத்தீர்ப்பின்படி நிரந்தரமாகிவிடும்!
சாதி வேறுபாடு இல்லாமல் தகுதியுள்ள இந்துக்கdள் அனைவருக்கும் அர்ச்சகராகும் உரிமை உண்டு என்று இத்தீர்ப்புகள் கூறியுள்ளன.
உயர் நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல் முறையீடும் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.








