தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் விவகாரம்: நிதின்கட்கரிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

ஸ்ரீபெரும்புதூர் முதல் வாலாஜாப்பேட்டை வரை ஆறு வழிச்சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்த வேண்டும் என அமைச்சர் நிதின் கட்கரிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். ஸ்ரீபெரும்புதூர் முதல் வாலாஜாபேட்டை வரையிலான சாலையில்…

ஸ்ரீபெரும்புதூர் முதல் வாலாஜாப்பேட்டை வரை ஆறு வழிச்சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்த வேண்டும் என அமைச்சர் நிதின் கட்கரிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஸ்ரீபெரும்புதூர் முதல் வாலாஜாபேட்டை வரையிலான சாலையில் ஆறு வழிச் சாலைப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும், மத்திய அரசின் திட்டங்களுக்குத் தேவையான ஒத்துழைப்பை தமிழக அரசு வழங்கும் என்று உறுதியளித்தும் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது: சென்னையில் இருந்து ராணிப்பேட்டை (NH-4) வரை இருக்கும் சாலையின் நிலையை மேம்படுத்திட வேண்டும் என தயாநிதி மாறன் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். இந்தச் சாலை சென்னை நகரம் மற்றும் அதன் துறைமுகங்களில் இருந்து காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு முக்கிய இணைப்பை வழங்குகிறது.

இந்தச் சாலையின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அதன் காரணமாக, சமீபத்தில் ஒரு சில மாவட்டங்களுக்கு, தான் ரயிலில் செல்ல நேரிட்டது. இந்தச் சாலை தொடர்பான தங்களது நாடாளுமன்ற உறுப்பினரின் கோரிக்கை முக்கியமானதாக இருந்தபோதிலும், நாடாளுமன்றத்தில் அமைச்சர் அளித்துள்ள பதிலால் தாங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளோம்.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்டங்களுக்கு ஆதரவாக தமிழக அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. குறிப்பாக, சென்னை துறைமுகம் முதல், மதுரவாயல் வரையிலான உயர்மட்ட விரைவுச் சாலைத் திட்டத்திற்கு, சாத்தியமான எல்லா உதவிகளையும் தமிழக அரசு வழங்கி வருகிறது. கடந்த காலத்தில் வழங்கப்படாத பல்வேறு சலுகைகள் மற்ற பெரிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைத் திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்துவதைக் கண்காணிக்க மாநிலத் தலைமையகத்தில் சிறப்புப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வனத் துறை அனுமதி பெறப்படுவது தொடர்பாக ஆய்வு செய்யப்படுகிறது. நான் அறிந்தவரையில், எந்தவொரு பெரிய தேசிய நெடுஞ்சாலைத் திட்டமும் அத்தகைய அனுமதிகளுக்காக நிறுத்தி வைக்கப்படவில்லை. தமிழக அரசு பல்வேறு நேர்மையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், மாநில அரசு, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் ஒத்துழைக்கவில்லை என்று கூறுவது துரதிர்ஷ்டவசமானது.

நாடாளுமன்றத்தில் தயாநிதி மாறன் குறிப்பிட்ட கோரிக்கையைப் பரிசீலிக்க, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகளை மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வழங்கிட வேண்டும். தேசிய நெடுஞ்சாலை-4-ல், ஸ்ரீபெரும்புதூர் முதல் வாலாஜாபேட்டை வரையிலான சாலையில், ஆறு வழிப்பாதைப் பணி நடைபெற்று வருகிறது. ஒப்பந்ததாரர்களுக்கும், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தப் பிரச்னையால் பணிகள் கிடப்பில் போடப்பட்டு, தற்போதுள்ள சாலையின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.

2020-டிசம்பர் மாதம், சென்னை உயர்நீதிமன்றம், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சின்னசமுத்திரம் சுங்கச்சாவடிகளில் இதுபோன்ற மோசமான பராமரிப்பு காரணமாக சுங்கச்சாவடி கட்டணத்தை 50 விழுக்காடாகக் குறைத்தது குறிப்பிடத்தக்கது. சாலைகளின் மோசமான நிலை, பொதுமக்களின் சிரமங்களை சிறப்பாகச் செயல்பட்டுவரும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

எனவே, இவற்றைக் கருத்தில் கொண்டு, ஸ்ரீபெரும்புதூர் முதல் வாலாஜாபேட்டை வரையிலான சாலையில் (NH-4) ஆறு வழிச் சாலைப் பணிகளை விரைவுபடுத்தவும். சாலைகளை நல்ல நிலையில் பராமரிக்கவும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும். மத்திய அரசின் திட்டங்களுக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து வழங்கும்” என்று அந்தக் கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.