இந்தியாவில் கடந்த காலத்தில் எதிர்மறையாக இருந்த பாலின பாகுபாடுகள் தற்போது நேர்மறையாக மாறியுள்ளதாக மத்திய அரசு புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.
தேசிய குடும்ப நல ஆய்வு 2019-2021ம் ஆண்டுகளுக்கான புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. இதில் இந்த தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. கடந்த 2015-16ம் ஆண்டு 1,000 ஆண்களுக்கு 991 என இருந்த பெண்களின் எண்ணிக்கையானது 2019-2021ம் ஆண்டில் 1,020 ஆக அதிகரித்துள்ளது. ஆண்களின் எண்ணிக்கையை விட பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது இதுவே முதல்முறையாகும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
1,000 ஆண்களுக்கு கிராமப்புறங்களில் 1,037 பெண்களும், நகர்ப்புறங்களில் 985 பெண்களும் உள்ளனர் என ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. ஆனால், மறுபுறம் கடந்த 5 ஆண்டுகளில் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 929 பெண் குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளன. 1,000 ஆண் குழந்தைகள் பிறந்த நகரங்களில் 924 பெண் குழந்தைகளும், கிராமங்களில் 931 பெண் குழந்தைகளும் பிறந்துள்ளன. இது கடந்த 2015-2016 புள்ளிவிவரங்களைவிட அதிகமாகும். ஆனாலும், இது சமூகத்தில் ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தமிழ்நாட்டை பொறுத்த அளவில், 1,000 ஆண்களுக்கு நகர்ப்புறங்களில் 1,062 பெண்களும், கிராமப்புறங்களுக்கு 1,113 பெண்கள் என மொத்தமாக சராசரியாக 1,000 ஆண்களுக்கு 1,088 பெண்கள் உள்ளனர்.
கடந்த 5 ஆண்டுகளில் பிறந்த பெண்குழந்தைகள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. 2015-16 ஆண்டுகளில் 1,000 ஆண்களுக்கு 954 என இருந்த பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 2020-21ம் ஆண்டுகளில் 878 என குறைந்துள்ளது.
தமிழ்நாடு மட்டுமல்லாது கேரளாவிலும் இந்த பெண் குழந்தைகள் விகிதாச்சாரம் வெகுவாக குறைந்துள்ளது. ஆனால் ஆந்திரப் பிரதேசத்தில் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2015-16ல் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 914 என இருந்த பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 2019-20ம் ஆண்டுகளில் 934 என அதிகரித்துள்ளது.
ஹரியானாவில் அதிகப்பட்சமாக இதுவரை இல்லாத அளவில் வளர்ந்த பெண்கள் எண்ணிக்கை மற்றும், கடந்த 5 ஆண்டுகளில் பிறந்த பெண் குழந்தைகளின் எண்ணிக்கை என இரண்டும் கணிசமாக அதிகரித்துள்ளன. 2015-16ல் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 836 என இருந்த பெண் குழந்தைகளின் எண்ணிக்கையானது 2020-2021ல் 893 ஆக அதிகரித்துள்ளன.