நாகை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள, குண்டு துளைக்கப்பட்ட விசைப்படகில் இந்திய கடற்படை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
காரைக்கால் மாவட்டம் காரைக்கால் மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 10 மீனவர்கள் கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அப்போது நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த
மீனவர்களின் விசைப்படகு மீது இந்திய கடற்படை அதிகாரிகள் திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர் வீரவேல் படுகாயமடைந்தார்.
அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், மற்ற மீனவர்கள் 9 பேர் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்திய கடற்படை அதிகாரி கமாண்டர் விஷால் குப்தா தலைமையிலான அதிகாரிகள் நாகை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குண்டுகள் துளைக்கப்பட்ட விசைப்படகில் ஆய்வு மேற்கொண்டனர்.
துப்பாக்கி சூடு சம்பவம் எப்படி நடந்தது? படகில் எத்தனை துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன? படகில் ஏற்பட்டுள்ள சேதம் உள்ளிட்டவைகள் குறித்து விசாரணை நடத்திய
அதிகாரிகள், இந்திய கடற்படையினர் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தால் விசைப்படகில் குண்டுகளால் ஏற்பட்ட 47 துளைகளைக் கண்டறிந்தனர். தொடர்ந்து
நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 9 மீனவர்களிடம் விசாரணை நடத்திய இந்திய கடற்படை அதிகாரிகள் குண்டடிப்பட்ட மீனவரிடம் விசாரணை நடத்த மதுரை செல்ல உள்ளனர்.







