இசைக்கு மதம், மொழி என எந்த எல்லையும் கிடையாது. தமிழ்நாட்டை தாண்டி கேரளா, கர்நாடகா, ஆந்திரா இருந்து வந்த எண்ணற்ற கலைஞர்கள், தமிழ் திரையுலகில் தங்கள் தடத்தை பதித்து விட்டு சென்றுள்ளனர். அப்படி தடம் பதித்த ஒரு இசையமைப்பாளர் குறித்து தற்போது பார்க்கலாம்.
மெல்லிசை மன்னர்களான எம்எஸ் விஸ்வநாதன் தொடங்கி, பல இசையமைப்பாளர்களுக்கு இசை ஒருங்கிணைப்பாளராக பணியாற்றியவர் கோவர்த்தனம். தெலுங்கைத் தாய்மொழியாக கொண்ட அவர் பெங்களூருவில் வசித்து வந்த நிலையில், அவரது தந்தை குடும்பத்தோடு சென்னைக்கு குடிபுகுந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளிலும் தயாரிக்கப்பட்ட ஜாதகம் என்ற படத்திற்கு முதன்முதலாக இசையமைத்தார் கோவர்த்தனம். பாடாத பாட்டெல்லாம் பாட வந்த பி. பி. ஸ்ரீனிவாஸ் இத்திரைப்படத்தில் பின்னணி பாடகராக அறிமுகமானார். 1960ம் ஆண்டு வெளியான கைராசி திரைப்படத்தில் இடம்பெற்ற அன்புள்ள அத்தான் வணக்கம் பாடல் கோவர்த்தனத்தை பிரபலமாக்கியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழ்த்திரையுலகில் பூதத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்ட பட்டணத்தில் பூதம் திரைப்படத்திற்கு கோவர்த்தனம் இசையமைத்தார். பெருந்தலைவர் காமராஜருக்கு கவியரசு கண்ணதாசன் தூது அனுப்பியதாக கருதப்படும் அந்த சிவகாமி மகனிடம் பாடல் கோவர்த்தனத்தை நாடறிய செய்தது. பட்டணத்தில் பூதம் திரைப்படத்தில் வரும் அத்தனை பாடல்களும் ஹிட் பாடலாக அமைந்தன.
பூவும் பொட்டும், சிவாஜி நடித்த அஞ்சல்பெட்டி-520 உள்ளிட்ட திரைப்படங்களுக்கும் இசையமைத்தார் கோவர்த்தனம். பூவும் பொட்டும் திரைப்படத்தில் இடம்பெற்ற நாதஸ்வர ஓசையிலே பாடல் இன்றும் கேட்கத் தூண்டுகிறது. எம். எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி, இளையராஜா, சந்திரபோஸ், தேவா எனப் பல இசையமைப்பாளர்களுக்கு இசை ஒருங்கிணைப்பாளராக கோவர்த்தனம் பணியாற்றியிருந்தார்.
அஞ்சல்பெட்டி-520 திரைப்படத்தில் டிஎம்எஸ், எல்ஆர் ஈஸ்வரியின் குரலில், எழுதாத கவிதை பெண்மை எடுத்தாள பிறந்தேன் உண்மை, பனி தூங்கும் மலரின் வெண்மை, தொடும்போது அடடா மென்மை என காதல் ரசம் சொட்டும் கவித்துவம் நிறைந்த கண்ணதாசன் பாடலுக்கு உற்சாகம் பொங்கிடும் வகையில் இசையமைத்திருந்தார் கோவர்த்தனம்.
டைட்டில் கார்டில் இசை உதவி என பெயர் இடம்பெற்றிருந்தாலும், கோவர்த்தனம் தனித்து இசையமைத்த திரைப்படங்களின் மெல்லிசை பாடல்கள் இன்றும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன.