முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் தேர்தலில் திமுகவைச் சேர்ந்த
சண்முகப்பிரியா 8 வாக்குகள் பெற்று தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 15 வார்டு கவுன்சிலர்கள் இருந்த நிலையில் கடந்த மே 30ஆம் தேதி புளியங்குடி ஒன்றிய கவுன்சிலராகவும், ஒன்றிய குழுத் தலைவராகவும் இருந்த தர்மர் அதிமுக சார்பில் மாநிலளங்களவை உறுப்பினர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதால் ஒன்றிய குழுத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழுத்
தலைவருக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு முதுகுளத்தூர் டிஎஸ்பி சின்னக் கண்ணு தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றியக் குழு தலைவருக்கான தேர்தல் இன்று
நடைபெற இருந்த நிலையில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு தீவிர சோதனைக்கு பின்னர் கவுன்சிலர்கள் தேர்தல் நடைபெறும் அறைக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது பெண் கவுன்சிலர் ஒருவர் தேர்தலை சீர்குலைக்கும் வகையில் அவரது
ஆடைக்குள் 50 மில்லி அளவு கொண்ட உஜாலா நீலத்தை (மை) மறைத்து வைத்திருந்தது
தெரியவந்தது.
இதனடிப்படையில் பெண் போலீசார் அவரிடம் இருந்து அந்த பாட்டிலை பறிமுதல்
செய்து மையை கீழே ஊற்றினர். இந்த சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதன்பின் ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு திமுகவைச் சேந்த 2 வது வார்டு கவுன்சிலர் சண்முகப்பிரியா என்பவரும் அவரை எதிர்த்து திமுக 3வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் நாகஜோதி என்பவரும் போட்டியிட்டனர்.
இதில் திமுகவை சார்பாக போட்டியிட்ட 2வது வார்டு கவுன்சிலர் சண்முகப்பிரியா 8
வாக்குகள் பெற்று ஒன்றிய குழுத் தலைவியாக தேர்வு செய்யப்பட்டார். அவரை எதிர்த்து
போட்டியிட்ட திமுக 3வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் நாகஜோதி 5 வாக்குகள்
பெற்றார். மேலும் ஒரு ஓட்டு செல்லாதவையாகவும் அறிவிக்கப்பட்டது.
வெற்றி பெற்ற ஒன்றியக் குழு தலைவர் சண்முகபிரியாவுக்கு ராமநாதபுரம் மாவட்ட கழக
பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், அரசு அதிகாரிகள், அலுவலக
பணியாளர்கள் திமுக நிர்வாகிகள், ஒன்றிய கவுன்சிலர்கள் வாழ்த்துக்களை
தெரிவித்தனர்.