”ரூ.10, ரூ.20 நாணயங்களை ஏற்க மறுத்தால் ஒழுங்கு நடவடிக்கை”- அரசு பேருந்து நடத்துநர்களுக்கு எச்சரிக்கை

பயணிகளுக்கு டிக்கெட் வழங்கும்போது ரூ.10, ரூ.20 நாணயங்களை நடத்துநர்கள் ஏற்க மறுத்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், அரசு பேருந்துகளில் டிக்கெட்…

பயணிகளுக்கு டிக்கெட் வழங்கும்போது ரூ.10, ரூ.20 நாணயங்களை நடத்துநர்கள் ஏற்க மறுத்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், அரசு பேருந்துகளில் டிக்கெட் வழங்கும்போது  பயணிகள் அளிக்கும் ரூ.10, ரூ.20 நாணயங்களை நடத்துநர்கள் மறுக்காமல் பெற்றுக்கொண்டு உரிய பயணச்சீட்டு வழங்க  வேண்டும் என போக்குவரத்துத்துறை சார்பில் ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் இது ரூ.10, ரூ.20 நாணயங்களை ஏற்க நடத்துநர்கள் சிலர் மறுப்பதாக மீண்டும் புகார் எழுகிறது என சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  இந்திய அரசால் வெளியிடப்படும் 10 மற்றும் 20 ரூபாய் மதிப்பிலான நாணயங்களை பயணிகள் அளிக்கும்போது  அதை நடத்துனர்கள் மறுக்காமல் கண்டிப்பாக ஏற்றுக்கொண்டு உரிய பயணச்சீட்டை பயணிகளுக்கு வழங்க வேண்டும் என சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது.

நடத்துனர்கள் 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்களை பெற்றுக் கொள்ள மறுத்ததாக புகார் பெறப்பட்டால் சம்பந்தப்பட்ட நடத்துநர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் எச்சரித்துள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.