குடியரசுத் தலைவர் கையால் அர்ஜூனா விருது பெற்ற முகமது ஷமி, வைஷாலி!

தமிழ்நாடு செஸ் வீராங்கனை வைஷாலி,  கிரிக்கெட் வீரர் முகமதுஷமிக்கு அர்ஜுனா விருது வழங்கி குடியரசுத் தலைவர் கவுரவித்தார். 2023-ஆம் ஆண்டிற்கான மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது,  அர்ஜுனா விருது உள்ளிட்ட தேசிய விருதுகளை…

தமிழ்நாடு செஸ் வீராங்கனை வைஷாலி,  கிரிக்கெட் வீரர் முகமதுஷமிக்கு அர்ஜுனா விருது வழங்கி குடியரசுத் தலைவர் கவுரவித்தார்.

2023-ஆம் ஆண்டிற்கான மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது,  அர்ஜுனா விருது உள்ளிட்ட தேசிய விருதுகளை பெறும் இந்திய விளையாட்டு வீரர்களின் பெயர் பட்டியல் கடந்த டிசம்பர் 20ம் தேதி மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டது.

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தால்,  சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் அர்ஜுனா விருதுக்கான வீரர்கள் பட்டியலில்,  கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, தமிழகத்தை சேர்ந்த செஸ் வீராங்கனை வைஷாலி உள்ளிட்டோர் பெயர் இடம்பெற்றிருந்தது.

இந்த விருது  வழங்கும் விழா டெல்லியில் இன்று நடைபெற்றது.  அதன்படி, டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு,  விளையாட்டு வீரர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

அப்போது,  இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு அர்ஜுனா விருதை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.  மேலும் தமிழகத்தை சேர்ந்த செஸ் வீராங்கனை வைஷாலிக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.  மேலும், சாத்விக் சாய்ராஜ்,  சிராக் ஷெட்டி (பேட்மிண்டன்) ஆகியோருக்கும் மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. இதுபோன்று,  பல்வேறு பிரிவுகளின் கீழ் விளையாட்டு வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.