ஊரடங்கு நீட்டிப்பு குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்ததையடுத்து கடந்த மே மாத தொடக்கத்தில் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமல்படுத்த உத்தரவிட்டார். இதனிடையே தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வந்தது. தற்போது தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதனால், ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
தற்போது, அமலில் உள்ள தளர்வுகளுடனான ஊரடங்கு நாளையுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனையில், தலைமை செயலாளர் இறையன்பு, மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதில், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு கூடுதல் தளர்வுகள் அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.








