“இந்தி விவகாரத்தில் இனி ஒரு உயிரையும் நாம் இழக்கக்கூடாது”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் ஏற்கனவே ஏராளமான தீரர்களை இழந்துவிட்டோம், இனி ஒரு உயிரையும் நாம் இழக்கக் கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் நங்கவள்ளி பகுதி தாழையூரைச் சேர்ந்த திமுக…

இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் ஏற்கனவே ஏராளமான தீரர்களை இழந்துவிட்டோம், இனி ஒரு உயிரையும் நாம் இழக்கக் கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் நங்கவள்ளி பகுதி தாழையூரைச் சேர்ந்த திமுக விவசாய அணி முன்னாள் ஒன்றியப் பொறுப்பாளர் தங்கவேல் இந்தித் திணிப்பிற்கு எதிராக தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.

இந்நிலையில் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

தங்கவேலு மரணம் குறித்து இடியென வந்த செய்தியால் கலங்கித் தவிக்கிறேன். இந்தித் திணிப்புக்கு எதிராக உயிர்த்தியாகம் செய்துள்ள தாழையூர் தங்கவேலுவுக்கு வீரவணக்கம்! இந்தித் திணிப்பை எதிர்த்து அரசியல்ரீதியாக – ஜனநாயக வழியில் தொடர்ந்து போராடுவோம்! போராட்ட வடிவமாக இன்னுயிரை இழக்கும் செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்.

 ‘இந்தியைத் திணிக்காதே’ எனக் காலங்காலமாய் நாம் உரத்துச் சொல்லும் முழக்கம் ஆதிக்க மனப்பான்மையில் இந்தியைத் திணிக்கும் ஒன்றிய அரசின் செவிகளுக்கும் இதயத்துக்கும் எட்டும்வரை நாம் ஓயப்போவதில்லை. தாழையூர் தங்கவேலு  குடும்பத்துக்கும் திமுக உடன்பிறப்புகளுக்கும் இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு தாம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.