கன்னியாகுமரி மாவட்டத்தில் தனியார் ஆலைக்கு சொந்தமான ஒர்க் ஷாப் ஒன்றில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான இயந்திரங்களை திருடவும், அதனை தடுக்க முயன்ற காவலாளியை கொல்லவும் முயற்சிகள் நடந்தன. அத்தோடு நிற்காமல் அக்காவலாளியை சாதியை சொல்லி இழிவுப்படுத்திய சம்பவமும் அரங்கேறியுள்ளது. எதனால் இச்சம்பவம் நடைபெற்றது என்பதை விரிவாக பார்க்கலாம்.
தென் மாவட்டங்களில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக தொழில்துறையில் கோலோச்சி வருபவர் திரு.வைகுண்டராஜன். அவருக்கும் அவரது சகோதரர் திரு ஜெகதீசனுக்கும் பாகப்பிரிவினை தொடர்பாக பிரச்சனை எழுந்து நீதிமன்றத்தால் தீர்த்து வைக்கப்பட்டது. நீதிமன்ற தீர்ப்பின்படி, அஞ்சுகிராமம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கனகபுரம் பகுதியில் உள்ள ஒர்க் ஷாப் திரு. வைகுண்டராஜனுக்கு பாத்தியப்பட்டதாகும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
திரு.வைகுண்டராஜனுக்கு பாத்தியப்பட்ட கனகபுரம் ஒர்க் ஷாப்பில் இருந்து சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பிலான மிஷினரி மற்றும் எக்கிப்மெண்ட்களை திரு.ஜெகதீசன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஏற்கனவே எடுத்துச்சென்று வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்துவிட்டனர். இதனைத் தொடர்ந்து மீதமுள்ள பொருட்களை பாதுகாக்கும் பொருட்டு வடிவேலு என்பவரை அந்த ஒர்க் ஷாப்பிற்கு காவலாளியாக திரு.வைகுண்டராஜன் நியமித்தார்.
இந்த சூழலில், கடந்த 17ஆம் தேதியன்று திரு.ஜெகதீசன் உத்தரவின்பேரில் தங்கஜெகன், முத்துகிருஷ்ணன், மாரிமுத்து மற்றும் சில வழக்கறிஞர்கள் சேர்ந்து மீதமுள்ள மிஷனரிகளை எடுத்துச்செல்ல முயற்சித்தனர். இதனை தடுத்த காவலாளி வடிவேலுவை கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர். காவலாளிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட தகவல் அறிந்து மீதமுள்ள பொருட்களை காப்பாற்றும் பொருட்டு திரு.வைகுண்டராஜன் மற்றும் அவரது பணியாளர்கள் கனகபுரம் ஒர்க் ஷாப்பிற்கு வந்துள்ளனர். எங்கள் பொருட்களை நாங்கள் எடுத்துச் செல்கிறோம். வேண்டுமென்றால் நீங்கள் நேரில் வந்து பார்த்துக்கொள்ளுங்கள் என தங்கஜெகன் உள்ளிட்டோரை திரு.வைகுண்டராஜன் அழைத்து காட்டியுள்ளார்.
அப்போது பிற வாகனங்களை எடுக்க விடாமல், குறுக்கே நின்ற வாகனம் ஒன்றை பணியாளர்கள் முன் நகர்த்தியபோது அங்கு நின்றுகொண்டிருந்த முத்துகிருஷ்ணன் என்பவர் தாமாக வாகனத்தின் முன்பு விழுந்து கால் உடைந்துவிட்டதுபோல் அலறியுள்ளார். ஆனால் அந்த வாகனத்தின் இன்ஜினை ஸ்டார்ட் செய்யாமல், பணியாட்களால் மெல்ல தள்ளப்பட்டு வந்த வாகனத்திற்கு முன்பு விழுந்த முத்துக்கிருஷ்ணன் கால் உடைந்து விட்டதுபோல் நாடகமாடியுள்ளார். பின்னர் சாதாரணமாக எழுந்து நடந்துசெல்வதும் அங்கு அரங்கேறியுள்ளது. இவை அனைத்து அங்குள்ள வீடியோ கேமராவில் பதிவாகியுள்ளது.
ஏற்கனவே, திரு.வைகுண்டராஜன் அவர்களை கொலை செய்யும் நோக்கில் அவரை பின்தொடர்ந்த முக்கிய குற்றவாளி என சந்தேகிக்கப்படும் நபர்தான் இந்த முத்து கிருஷ்ணன் ஆவார். இவர் இந்த சம்பவத்திலும் ஊர்ந்து சென்ற வாகனத்திற்கு முன்விழுந்து கொலை முயற்சி என நாடகமாடியது திரு.வைகுண்டராஜன் தரப்பினரிடம் உள்ள வீடியோ மூலம் அம்பலமாகியுள்ளது. மேலும், திரு.வைகுண்டராஜனுக்கு எதிரான வீண் அவதூறுகள் மற்றும் பொய் புகார்களை பரப்பி அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவித்தவர்தான் இந்த முத்துகிருஷ்ணன் என்பது குறிப்பிடதக்கது.
நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் பாகப்பிரிவினையில் திரு.வைகுண்டராஜனுக்கு சொந்தமான கனகபுரம் ஒர்க் ஷாப்பில் உள்ள 15 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களில் 6 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டுவிட்ட சூழ்நிலையில், மீதமுள்ள தமக்கு சொந்தமான பொருட்களை காப்பாற்ற திரு.வைகுண்டராஜன் முயற்சி செய்தபோது அவர் முன்னிலையில், கொலை முயற்சி நடந்ததாக பொய் செய்தி பரப்பப்பட்டு வருகிறது.
எதிர் தரப்பினரின் குற்றச்சாட்டுகள் பொய் என்பதை நிரூபிக்க தேவையான வீடியோ ஆதாரங்கள் காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே தென் மாவட்டங்களின் தொழில்துறை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் தொழிலதிபரான திரு.வைகுண்டராஜனுக்கு சொந்தமான உபகரணங்களை பாதுகாத்து தர காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இராமானுஜம்.கி
இந்த செய்தியை வீடியோவாக காண – https://www.youtube.com/watch?v=hYNAVFoSqT4