அமலாக்கத்துறை வழக்கை சட்டரீதியாக அமைச்சர் பொன்முடி எதிர்கொள்வார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் இன்று காலை அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை உள்பட 5 க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை செய்து வருகிறது. அதேபோல அவரது மகன் கவுதம சிகாமணி எம்பி வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் தொலைக்காட்சி முதன்மை செயல் அதிகாரி கார்த்திக் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சர் பொன்முடி வீட்டில் இருந்த காரில் இருந்து எடுக்கப்பட்ட ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இரு வழக்குகள் தொடர்பாக இந்த சோதனை நடைபெறுவதாக அமலாக்கத்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகின்றன. சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் இன்று காலை 7 மணி முதல் 5 அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் அமலாக்கதுறை அதிகாரிகள் பொன்முடியிடம் விசாரணையும் நடத்தி வருகின்றனர். மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீடு மற்றும் அவருக்கு நடத்தி வரும் கல்லூரியில் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதேபோல கள்ளக்குறிச்சி மக்களவை உறுப்பினரும், அமைச்சர் பொன்முடியின் மகனுமான கௌதம் சிகாமணியின் வீடு மற்றும் அவர் நடத்தி வரும் பொறியியல் கல்லூரியில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையை முன்னிட்டு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி ஏந்தியபடி தீவிர காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 2006 -2011ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் உயர்கல்வித் துறை மற்றும் சுரங்கத் துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி. இந்த காலத்தில் அவர் தனது நெருங்கிய உறவினர்கள் மற்றும் பினாமிகளுக்கு சட்டவிரோதமாக செம்மண் குவாரிகளை ஒதுக்கியதாகவும், தனது மகன் கௌதம சிகாமணிக்கு 2 குவாரிகளை ஒதுக்கியதாகவும் புகார் எழுந்தது. இதன்மூலம் அரசுக்கு ரூ.28 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டதாக அமலாக்கத்துறை குற்றச்சாட்டை முன்வைத்தது. இதனை அடிப்படையாக கொண்டு தற்போது சோதனை நடைபெற்று வருகிறது.
இதே போன்று, பொன்முடியின் மகன் கௌதம்சிகாமணி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள யுனிவர்ஸ் நிறுவனத்தின் மூலம் ரூ. 7.05 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளார். கடந்த 2008ஆம் ஆண்டு ரூ,41,57,225 க்கு இந்தோனேஷியாவில் உள்ள நிறுவன பங்குகளை கௌதம சிகாமணி வாங்கியுள்ளார். இந்த பணபரிவர்த்தனைகளை ரிசர்வ் வங்கி விதிகளுக்கு புறம்பாக உள்ளது.
இதன்பேரில் கௌதம சிகாமாணி மீது சட்டவிரோத பணபரிவர்த்தனை புகாரில் FEMA சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்திருந்தது . இந்த வழக்கு நிலுவையில் இருந்து வரும் நிலையில் தான் தற்போது பொன்முடி மற்றும் அவரது மகன் வீடுகளில் அமலாக்கதுறை சோதனை நடைபெறுகிறது.
இந்த நிலையில் பெங்களூரு எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்னை விமானம் வந்தடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் தெரிவித்ததாவது..
“ இரண்டு நாட்கள் பெங்களூரில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறும். அதில் 24 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். பாஜகவை வீழ்த்துவதற்காக கூட்டப்படும் கூட்டம் இது. இதனால் பாஜக ஆட்சிக்கு மிகப்பெரிய எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
அதனுடைய வெளிப்பாடுதான் அமலாக்கத்துறை ஏவி விடப்பட்டுள்ளது. அதனைப் பற்றி கிஞ்சித்தும் திமுக கவலைப்படவில்லை. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது பொன்முடி மீது புனையப்பட்ட பொய்வழக்கு இது. தொடர்ந்து 10 ஆண்டுகாலம் அதிமுக ஆட்சியில் எந்த சோதனையும் நடத்தப்படவில்லை.
அமலாக்கத்துறை வழக்கை அமைச்சர் பொன்முடி சட்ட ரீதியாக சந்திப்பார். நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் பதில் வழங்கத் தயாராகவுள்ளனர். எதிர்க்கட்சி கூட்டத்தின் நோக்கத்தை திசைதிருப்பும் தந்திரமே இந்த சோதனை ” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.