கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் அமைச்சர் பொன்முடியை சந்திக்க சென்றபோது, அவர்களை கண்டும் காணாதது போல் அமைச்சர் சென்றதாக சர்ச்சை எழுந்துள்ளது.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட 10 உறுப்புக் கல்லூரிகள் தற்போது அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளாக மாற்றப்பட்டுள்ளன. அங்கு பணிபுரியும் கெளரவ விரிவுரையாளர்களுக்கு கடந்த 3 மாத காலமாக ஊதியம் வழங்கப்படவில்லை.
இது தொடர்பாக பல்வேறு முறை வலியுறுத்தியும் ஊதியம் விடுவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் உரிய நேரத்தில் ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கௌரவ விரிவுரையாளர்கள் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை சந்திக்க சென்றனர்.
70-க்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளர்கள் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சரின் இல்லத்திற்கு சென்று காத்திருந்தனர். ஆனால் வீட்டில் இருந்து வெளியே வந்த அமைச்சர் பொன்முடி, தன்னை பார்க்க இருந்த கௌரவ விரிவுரையாளர்களை கண்டும் காணாமல் புறப்பட்டு சென்றார். ஊதிய கோரிக்கைகளை வலியுறுத்தி அமைச்சரை பார்க்க சென்றவர்களை, அவர் புறக்கணித்து சென்றது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
– இரா.நம்பிராஜன்








