காதலிப்பதாக கூறி ஏமாற்றுபவர்களிடம் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும் என கல்லூரி மாணவிகளுக்கு சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அறிவுரை கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் மாநில மகளிர் ஆணையம் சார்பில், மனித கடத்தலுக்கு எதிரான
விழிப்புணா்வு பயிற்சி தனியார் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. மனித உறுப்பு திருட்டு, பாலியல் தொழில் உள்ளிட்டவைகளில் ஈடுபடுத்த உலகளவில் மனித கடத்தல் நிகழ்த்தப்படுவது குறித்து திரை மூலம் காட்சிப்படுத்தப்பட்டு, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சி தலைவர் செந்தில் ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மாணவிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உரையாற்றினர்.
அமைச்சர் கீதாஜீவன் மாணவிகளிடம் பேசும்போது, மாணவிகள் கல்லுரி படிக்கும் காலம்
மிகவும் மகிழ்ச்சியான தருணம், படிக்கும் பொழுது கடமை, கட்டுப்பாடு,
கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்றார். கல்லுரி படிப்பு என்றாலே அறிவாற்றல் வளர கூடிய ஒரு தளம் எனக் கூறிய அவர், கல்லுரி முடித்த பின்
அடுத்து என்ன படிக்க வேண்டும் என மாணவிகள் சிந்திக்க வேண்டும் என்றார்.
சமூக வலைத்தளங்களில் உலாவும் தேவையில்லாத வீடியோ, புகைப்படங்களை பார்க்காத வகையில் மாணவிகள் செல்போன்களை கவனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் சமூக நலத்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டார். காதல் என்ற வார்த்தையை சொல்லி மாணவிகள் சிலர் ஆங்காங்கே சுற்றி திரிவது வேதனையாக இருப்பதாக கூறிய அமைச்சர் கீதா ஜீவன், காதல் என்ற ஆசை வார்த்தை கூறி ஏமாற்றுபவர்களிடம் சிக்காமல் மாணவிகள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
மாவட்ட நிர்வாகம், காவல் துறை, சமூக நலத்துறை சர்ப்பில் பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவிகள், இளம்பெண்கள் பாதுகாப்பை தமிழ்நாடு அரசு உறுதி செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். சிறுமிகள், பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டால் 1098, 1091 என்கிற இலவச தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும் அமைச்சர் கீதா ஜீவன் கூறினார்.







