நடிகை மேக்னா ராஜ் தனது மகனுக்கு வைத்துள்ள பெயரை சமூக வலைதளம் மூலம் அறிவித்துள்ளார்.
தமிழில், காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா உட்பட சில படங்களில் ஹீரோயினாக நடித்தவர் மேக்னா ராஜ். மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள இவர், நடிகர் சுந்தர்ராஜ், நடிகை பிரமிளா ஆகியோரின் மகள்.
இவர் கன்னட நடிகரும் நடிகர் அர்ஜூனின் மருமகனுமான சிரஞ்சீவி சார்ஜாவை காதலித்து கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த வருடம் ஜூன் மாதம் மாரடைப்பு காரணமாக சிரஞ்சீவி சார்ஜா உயிரிழந்தார். அவர் மறைந்த போது, மேக்னா ராஜ், 4 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
அவர் மறைவை அடுத்து மேக்னா ராஜ் வெளியிட்டிருந்த உருக்கமானப் பதிவில், ‘நம் காதலின் அடையாளமாக விலைமதிக்க முடியாத பரிசை எனக்கு கொடுத்திருக்கிறீர்கள். அது நம் குழந்தை’ என்று கூறியிருந்தார். இவருக்கு கடந்த வருடம் அக்டோபர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையை செல்லமாக சிண்டு என அழைத்து வந்தனர்.
குழந்தைக்கு பெயர் சூட்டுவிழா விரைவில் நடைபெறும் என்று அவர் குடும்பத்தினர் கூறி வந்தனர். இந்நிலையில் தன் குழந்தைக்கு ராயன் ராஜ் சார்ஜா (Raayan Raj Sarja) என பெயர் வைத்துள்ளதாக நடிகை மேக்னா ராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள மேக்னா ராஜ், அதில் தனது திருமண காட்சி களையும் குழந்தையின் வீடியோவையும் இணைந்து வெளியிட்டுள்ளார். அதில் குழந்தைக் கு வைக்கப்பட்டுள்ள பெயரை அறிவித்துள்ளார்.









